சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும். துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்? அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு. ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர். குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன். அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு. எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. எனினும் குருவின் ஆசி ஆசிதானே. அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை (மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை) சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.