டிசம்பர் 12,2017
சபரிமலை: சபரிமலை மண்டல காலத்தில், நடை திறந்த, 23 நாட்களில், வருமானம், 94 கோடி ரூபாயாக அதிகரித்தது. கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், நடப்பு மண்டல சீசன் துவங்கியது முதல், சமூக வலைதளங்களில், சபரிமலைக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ’அய்யப்பன் காணிக்கையை, அரசு தட்டிப் பறிக்கிறது; எனவே, காணிக்கை செலுத்த வேண்டாம்’ என, தகவல் பரப்பப்பட்டது.
பந்தளம் அரண்மனையில் மரணம் நிகழ்ந்த போதும், தமிழகத்தில், ’ஒக்கி’ புயல் வீசிய போதும், சபரிமலை நடை அடைக்கப்பட்டதாக பரப்பப்பட்டது. இந்த பொய் பிரசாரங்களை மீறி, சபரிமலை வருமானம், புதிய சாதனையை படைத்து வருகிறது. 23 நாட்களில் வருமானம், 94 கோடி ரூபாயாக அதிகரித்தது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 14 கோடி ரூபாய் அதிகம். இது, 8ம் தேதி வரை உள்ள கணக்கு. அதற்கு பிந்தைய நாட்களில், கூட்டம் அலைமோதியது. இதனால், வருமானம் மேலும் அதிகரிக்கும் என்றும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது, இது புதிய சாதனை என்றும், தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.