தங்க அங்கி இன்று சன்னிதானம் வருகை: நாளை மண்டலபூஜை

டிசம்பர் 25,2017



சபரிமலை: சபரிமலையில் நாளை மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வருகிறது.கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பூஜைகளின் நிறைவாக நாளை மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது.

மண்டலபூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள், தங்க அங்கி காணிக்கையாக வழங்கினார். இந்த அங்கி கடந்த 22-ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்டது. இந்த பவனி இன்று மதியம் ஒரு மணிக்கு பம்பை வந்தடைகிறது. அதன் பின்னர் பம்பை கணபதிகோயில் அருகே அங்கி பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். மாலை மூன்று மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு ஐயப்பா சேவாசங்க தொண்டர்கள் மூலம் தலைச்சுமடாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர். 6:25 மணிக்கு 18-ம் படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் வாங்கி நடை அடைத்து ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும். நாளை இரவு 3:15 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் காலை 9:30மணிக்கு நிறைவு பெறும். 11:00 முதல் 11:40 மணிக்கும் இடையே கும்பராசி முகூர்த்தத்தில் மண்டலபூஜை நடைபெறும். நாளை இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்படும். அதன் பின்னர் மகரவிளக்கு கால பூஜைக்காக 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கும்.நாளையுடன் மண்டலகாலம் நிறைவு பெறும் நிலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்