ஜனவரி 13,2018
சபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பவனி பந்தளத்திலிருந்து நேற்று புறப்பட்டது. நாளை மதியம் 1:47-க்கு மகர சங்கரம பூஜை நடக்கிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மதியம் 12:30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொடங்கின. அந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க திருவாபரணபவனி புறப்பட்டது. திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். பூஜா பாத்திரங்கள் அடங்கிய பெட்டியை சிவன்பிள்ளையும், கொடிபெட்டியை பிரதாபசந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம் 23 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர். நேற்று ஐரூர் புதியக்காவு தேவி கோயிலில் இந்த பவனி தங்கியது. நாளை மாலை 5:30 மணிக்கு சரங்குத்திக்கும், 6:20க்கு சன்னிதானத்திற்கும் வந்து சேரும். இன்று மாலை 6:00 மணிக்கு பின்னர் பம்பையில், பம்பை விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். மூங்கில் கம்புகளின் கோபுரங்கள் வடிவமைத்து அதில் விளக்குகள் ஏற்றி பம்பை ஆற்றில் சரணகோஷத்துடன் மிதக்க விடுவர். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நேரத்தில் சபரிமலையில் நடைபெறும் விசேஷ பூஜை மகரசங்கரம பூஜை. இந்த ஆண்டு இந்த பூஜை நாளை மதியம் 1:47 மணிக்கு நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.