ஜனவரி 17,2018
சபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் புறப்பட்ட மன்னர் பிரதிநிதி நேற்று மாலை சன்னிதானம் வந்தார். அவருக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப் பட்டு அழைத்து செல்லப் பட்டார். 14ம் தேதி சபரிமலையில் நடைபெற்ற மகரவிளக்கு திருவிழாவுக்காக 12-ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்டது. இந்த பவனியில் மன்னரின் பிரதிநிதியாக ராஜராஜவர்மா பல்லக்கில் புறப்பட்டார்.
பவனி 14-ம் தேதி மதியம் பம்பை வலியான வட்டம் வந்ததும் மன்னர் பிரதிநிதி மட்டும் சன்னிதானம் வராமல், பம்பையில் தங்கினார். மாலை 6:35 மணிக்கு திருவாபரணம் சன்னிதானம் வந்தடைந்து ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று மாலை ராஜராஜவர்மா பம்பையில் இருந்து சன்னிதானம் வந்தார். அவருக்கு பெரிய நடைப்பந்தலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தங்கினார். இன்று மன்னர் பிரதிநிதி சார்பில் களபாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சன்னிதானத்தில் தங்கி ஐயப்பனை வழிபடுவார். 20ம் தேதி காலை 7:00 மணிக்கு இவரது முன்னிலையில் நடை அடைக்கப்படும். கடந்த 31-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நாளை காலை 10:30 மணிக்கு நிறைவு பெறும். 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.