டிசம்பர் 19,2018
பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக பம்பா, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து பலமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 144 தடையை விலக்கும் படி இந்து அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரள சட்டசபையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சபரிமலை கோயிலில் அமலில் உள்ள 144 தடையை டிசம்பர் 21 நள்ளிரவு வரை நீட்டிப்பதாக பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பா மற்றும் சன்னிதானம் எக்சிக்யூடிவ் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட போலீஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை டிச.,27 துவங்க உள்ள நிலையில் தற்போது மீண்டும் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.