சபரிமலையில் நெய் அபிஷேகம் நிறைவு: நடை அடைப்பு

ஜனவரி 19,2019



சபரிமலை, -சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. மண்டல-, மகரவிளக்கு காலத்தில் 60 நாட்களாக நடைபெற்று வந்த நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. அதன் பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு களபபூஜை நடத்தினார். பிரம்ம கலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார்.

பின்னர் மூலவருக்கு களபம் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடைபெற்றது.நேற்று இரவு 9:00 மணிக்கு ஐயப்பன் சரங்குத்திக்கு எழுந்தருளினார். பந்தளத்தில் இருந்து திருவாபரணங்களுடன் கொண்டு வரப்பட்ட திடம்பில் திருமுகத்துடன் இந்த எழுந்தருளல் நடைபெற்றது. இங்கு நாயாட்டுவிளிஎன்ற சடங்கு நடைபெற்றது.இது ஐயப்பன் வரலாறு மற்றும் சபரிமலை கோயில் வரலாற்றை தனி ராகத்தில் பாடும் நிகழ்ச்சியாகும். திருவிழாவுக்கு வந்த பக்தர்களை சரங்குத்தி வரை வந்து ஐயப்பன் வழி அனுப்பியதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தீப்பந்தம் அணைக்கப்பட்டு, மேளதாளம் நிறுத்தப்பட்டு ஐயப்பன் மாளிகைப்புறம் கோயில் வளாகத்தில் உள்ள மணி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பக்தர்களை அனுப்பி விட்டு பூதகணங்களை அழைத்து வருவதாக நம்பப்படுகிறது.இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக பெற்று செல்லலாம். இரவு 10:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மணி மண்டபத்தில் குருதிபூஜை நடைபெறுகிறது. அதன் பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவவர்மா முன்னிலையில் கோயில் நடை அடைத்ததும் திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வருமானம் 255 கோடி ரூபாயை கடந்தது. கடந்த ஆண்டை விட 45 கோடி ரூபாய் அதிகமாகும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்