SS வேங்கடேச ப்ரபத்தி (தமிழ்) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வேங்கடேச ப்ரபத்தி (தமிழ்)
வேங்கடேச ப்ரபத்தி (தமிழ்)
வேங்கடேச ப்ரபத்தி (தமிழ்)

1. வேங்கடத்தான் விரிமார்பில் விழைந்தமர்ந்த கருணையளே
பூங்கமலத் தளிர்க்கரத்தால் பொறுமை வளர் பூதேவி
ஓங்கிய சீர் குணம் ஒளிரும் உயர்த்தனிப்பேர் தவத்தாயே
வேங்கடத்தான் திருத்தேவி நின் பாதம் சரண் புகுந்தோம்

2. கருணையெனும் திருக்கடலே காத்தளிக்கப் படைத்தவனே
பெருந் தாயைப்பிரிந்தறியாப் பெரியோனே வல்லவனே
ஒரு முதல்வா பாரிஜாத உயர்மலரே துயர்களையும்
திருவடிகள் பற்றி உய்ய வேங்கடவா சரண் புகுந்தோம்

3. ஒன்றுடனொன்று ஒத்திணைந்த ஒப்புயர்வில் அடியவர்தான்
அன்று முதல் இன்று வரை அருளமுதாய்த் தொழத் தகுந்த
நன்மணங்கள் வாய் அவிழ்ந்த நறுமலர்கள் மிக நிறைந்த
நின்னடிகள் தஞ்சமென வேங்கடவா சரண் புகுந்தோம்

4. அன்றலர்ந்து மிகச் சிவந்தே அருங்குளத்தில் பறிபடாது
நின்றிருக்கும் தாமரை நின் திருவடிக்கு நிகராகும்
என்றுரைக்கும் உறையும் ஒரு மிக முரட்டு கல்லுரையாய்
தென்படுமாறு உளதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

5. கொடி அமிர்தத் திருகலசம் கற்பதரு தாமரைப் பூ
நெடிய குடை சங்கு சக்கரம் வஜ்ஜிரத்தோடு அங்குசமாம்
அடையாள ரேகைகள்தான் படர்ந்தமைந்த நினது திரு
அடியிணைகள் பற்றி நின்றே வேங்கடவா சரண் புகுந்தோம்

6. உள்ளங்கால் பேரொளிக்கு பத்மராக ரத்தினங்கள்
ஒள்ளிய சீர் புரவடி போல் இந்த்ர நீல ரத்தினங்கள்
வெள்ளிய நல் நகங்களுக்கு வெண்மதிகள் தோற்றோட
உள்ளிவந்தோம் நின்னடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

7. வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டரிய திருவடியை
பூக்கமலத் திருத் தேவி தளிர்க்கரத்தால் ஆசையுடன்
ஏற்புற்றே வருடிடவும் வாட்டமுறும் மெல்லடியை
நோக்க அருள் பொழியடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

8. மன மகிழ்ந்து திருமகளும் மண்மகளும் நப்பினையும்
நனைவிழந்து துளிர் தளிர்க்கும் தன் ரோஜா திருக்கரத்தால்
தினம்வருட அவர் கரத்துத் திருச் சிவப்பு தொற்றியதோ
எனச் சிவந்த நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

9. நினை வணங்கு சிவ பெருமார் நெடுமடியில் நவரத்ன
மணிகளிடை விதை முளைபோல் கதிர் ஒளிகள் கிளர்ந்தெழுமே
கணங்களென கற்பூர ஆர்த்தியென மணி ஒளியைத்
தினமேற்கும் நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

10. எவ்வடிகள் வேதமெலாம் மிகப் புகழும் திருவடிகள்
எவ்வடிகள் ஞானியர்க்குத் தேன் பெருக்கும் செவ்வடிகள்
எவ்வடிகள் புகல் என நின் மலர்க்கரந்தான் சுட்டடிகள்
அவ்வடியை அடைந்துய்ய வேங்கடவா சரண் புகுந்தோம்

11. தேர்த் தட்டில் பார்த்தனுக்குச் சரண் புகுவாய் என உரைத்து
நேர்த்தி மிகக் காட்டிய தெத்திருவடியோ அவ்வடியே
கீர்த்திமிகு வேங்கடத்தில் வலக் கரந்தான் காட்டடிகள்
பார்த்தனைப் போல் பயன் பெறவே வேங்கடவா சரண் புகுந்தோம்.

12. உனை நினைத்தே உன்னிடத்தே ஆள்பவர் தம் மனத்திடத்தும்
தினமவர் தாம் போற்றுமறை முடியிடத்தும் வேங்கடத்தும்
எனது பெரும் தலையிடத்தும் காளிங்கன் தலையிடத்தும்
மனத்திடத்தும் புகுமடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

13. வாட்டமின்றித் தரையில் நிறை மணமலர்கள் சூழ்ந்தமைய
நீட்டிய பல் சிகரத்து வேங்கடத்தின் அணியாகி
நாட்டமுறு மனம் ஈர்த்து நல்லடியார்க்கின்புணர்ந்து
வீட்டின்பம் தருமடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

14. சரண் புகுவார் முதன் முதலில் அறிந்தறியக் கற்றனவாய்
ஒரு சிறுபைங் குழவிக்குத் தாயருள் போல் அமைந்தனவாய்
பெரும் அமுதாய் வேறெதெற்கும் ஒப்புமையை ஒழித்தனவாய்
இருந்தருள் நின் அடிகளினை வேங்கடவா சரண் புகுந்தோம்.

15. தூய்மனத்துப் பெருந்தகையோர் தொழுதேத்தும்மலர்தாளாய்
வாய்த்துளயிப் பிறவியெனும் பெருங்கடலைத் தாண்ட வைப்போய்
தாயனைய மாமுனிவர் எமக்குணர்த்தி சரண்புகுவீர்
போய் என்ற நினதடியை வேங்கடவா சரண் புகுந்தோம்

16. சரண்புகு நின் அடியவர்தம் குறை மறைத்து நீயருளப்
பெருந் துணைகள் பல புரிந்து குற்றேவல் கொண்டருளும்
திருத்தாய்வாழ் அருள் மார்பா உமக்கே யாம் ஆட்படுவோம்
திருவடிக்கே பணிந்துய்வோம் வேங்கடவா சரண் புகுந்தோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar