SS வரதராஜப் பெருமாள் பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வரதராஜப் பெருமாள் பதிகம்
வரதராஜப் பெருமாள் பதிகம்
வரதராஜப் பெருமாள் பதிகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்நிதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

காப்பு வெண்பா

சிரவைநகர் மீதிற் சிறப்புற் றிசையும்
வரதரா சப்பெரு மாள்பொற் -புரமிசையச்
சாத்துந் துதிப்பதிகஞ் சார்காவ லாழ்வர்தம்
ஏத்துந்து பொற்பதங்க ளே.

நூல்

எண்சீர்விருத்தங்கள்

1. தரங்கமிக் கதிர்கட லுண்டெழுங் கமஞ்சூற்
சலதர மேனியுஞ் சயங்கொளைம் படைதோய்
கரங்களுந் தாமரைக் கண்களு மந்த
காசமுற் றலர்ந்தசெவ் வாயுமெய் வேதச்
சிரங்கவின் றமைதிருத் தாள்களு முபய
தேவியர் களுந்திகழ் தரக்கக மிசையோர்
தரங்கவின் சேவைநல் குதிசர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாளே.

2. சகத்திர தளங்கொள்பொன் னம்புய மீதிற்
றழைத்தவிர் மங்களப் பொன்னையம் புயமேற்
சுகந்திரம் பொருந்தவைத் தமைமண வாள
சுந்திர நின்னடித் துணைகளை யன்பா
லகத்திரம் பொருந்தவைத் திடவிரும் படியே
னல்லலங் கடலிடை யமிழ்ந்திடன் முறையோ
சகத்திர ளன்பர்கள் தொழச்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாளே.

3. துட்டநிக் கிரகமுஞ் சிட்டரைக் காக்குந்
தொழிலுநின் கையினிற் சுடர்விரித் தமையும்
வட்டமெய்ச் சக்கர மியற்றிடு முனக்கோர்
வருத்தமு மின்றென மறைவழுத் திடுநின்
னிட்டமிப் படியிரங் காதுறல் கால
வியல்பென நீயுமெம் போலிசைத் திடற்காஞ்
சட்டமின் றின்றிரங் குதிசிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெருமாளே.

4. கோயிலின் றிருப்பணி யாதிய புரியுங்
கொள்கைமெய்த் தொண்டரைக் குறுநகை புரிந்து
பேயிலின் றிருப்புவைத் தேபொருள் காக்கும்
பித்தின ரிகழ்ந்தனர் பிரமைகொண் டறத்தை
நோயிலின் றியபல நிந்தைசெய் தந்தோ
நொறுக்கினர் வலிகெட நொடியின் முன்வந்தே
தாயிலின் புறவருள் வாய்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாளே.

5. கண்டவ ருள்ளமுற் றவுங்கனன் மெழுகிற்
கரைத்துருக் குபுவிழி கருத்தினைக் கொள்ளை
கொண்டருண் மயஞ்செய்நின் மங்கள சகுண
கோலமென் விழியக லாதமைத் துண்மைத்
தொண்டர்கொண் டாடிய சுகநிலை யகத்தே
துலக்கியென் வினையுட லலக்கண்முற் றொழிப்பாய்
தண்டரங் கக்கட லிற்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெருமாளே.

6. கூடலென் றுன்றிரு வருளென துள்ளங்
குளிர்ந்துநின் னாடலின் கொற்றமுள் வியந்து
பாடலென் றுலகிடத் தமையுயிர்த் திரள்கள்
பலவுமெய்ப் பத்தியுட் பதிந்துபே ரின்ப
மூடலென் றடிமையொ ருடலினும் புகுதா
முத்திபெற் றிடர்செய்மும் மலப்பெரும் பகையைச்
சாடலென் றுரைத்தருள் வாய்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாளே.

7. கூம்பிலர் நெஞ்சகஞ் சிரமிசை துணைக்கை
குவித்தில ரெறிதிரைப் பாற்கடன் மீதிற்
பாம்பிலங் கறிதுயில் புரியுநின் றிருத்தாள்
பரவிலர் பசுவினங் களைப்பரிந் தன்பா
லோம்பிலர் கலியட லடங்கிட வறங்க
ளோங்கிட வோர்விளை யாட்டிசை யாசைத்
தாம்பில ரிதயமொப் பாஞ்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெருமாளே.

8. ஆசனைத் தையுங்கெடுத் தன்பரை யெடுக்கு
மரிதிரு நாரண வணியரங் காநின்
பூசனை புரிந்துதுத் தியம்பல விசைத்துப்
புகழ்பொலி யாயிர நாமம்விண் டன்பால்
வாசனைத் துளவுகொண் டர்ச்சனை புரியும்
வாழ்க்கையி லென்றுமா றாதமைத் துவப்பாய்த்
தாசனை யாளடைக் கலஞ்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெருமாளே.

9. பூதனை தன்முலைப் பாலுட னுயிரும்
புசித்தவ ளுயிர்க்குறும் பொய்ப்பிறப் பிறப்பாம்
வாதனை தவிர்த்தனை வலிந்துநின் புகழ்ச்சீர்
வாழ்த்திமிக் கிரக்குமென் மனத்திடை யமையுங்
கோதனைத் தையுந்தவிர்த் தன்பர்கள் பொலிவை
குந்தமெந் நாளுமென் சிந்தைவிட் டகலாச்
சாதனை யருள்கிலை யென்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாளே.

10. கண்ணனே நீயென வுயிர்த்திரள் பெற்ற
கண்ணனே கத்தினுங் கலந்திசை மணிமெய்
வண்ணனே யருட்சட கோபன கத்துள்
வயங்கியற் சிற்சுக வானந்த மயமாம்
விண்ணனே யென்னுடற் பிணிப்பற வப்பால்
வேலையு ளமிழ்த்திட வேண்டுமெய்க் கருணைத்
தண்ணனே யெண்ணனே யணிச்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாளே.

11. வனசமென் மலர்த்திரு மாதுதன் னுரம்போன்
மருவியெந் நாளினு மங்களம் பெருக்கத்
தனதுநட் சத்திரப் பேர்ச்சிர வணவூர்
சார்கரி வரதரா சப்பெரு மாண்மேற்
சனனம ரணமில திகபர சுகசா
தனந்தரு வான்கந்த சாமிசொல் பதிகம்
மனதுவப் புடன்றுதி புரியடி யார்க்கெம்
மாட்சியு மருவிடுந் தாழ்ச்சிமுற் றறுமே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar