| இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும். மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். இங்குள்ள விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்கு வடக்கு நோக்கியிருப்பது மிக அரிய கோலம். இங்கு மூலஸ்தானம் அருகில் உள்ள உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார். இங்கு மார்கழிபூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமி களுக்கும் பூஜை நடக்கிறது. சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.
. | |
|