மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.
வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயி ல்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.
பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம். பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்களிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான். ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.
ஏன் நவமியில் அவதரித்தார்?
ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமலிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.
ராம நாம மகிமை: ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்தபோது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான். அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்!
ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, ஜனன உற்சவம் மற்றொன்று கர்ப்ப உற்சவம்.
கர்ப்ப உற்சவம்: ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப்படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதமிருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள். காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள். அதையொட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகின்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்துகளோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.
ஜனன உற்சவம்: இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாணமும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களிலும் பஜனை, ராமாயண பிரவசனம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள். பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்தக் கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும். ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராமநாமத்தை உச்சரித்தபடி இருப்பர். இதை அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.
ராம நவமி விரதம் இருக்கும்முறை: மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள். ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.
குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும். பின்னர், வழக்கமாகன பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும்.
ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம். நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையையும் அனுமனுக்குப் படைக்க வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம்.
இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்கவேண்டும். பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல்போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்!
ராமபிரான் சென்ற வழி: ராமபிரான், சீதை, லட்சுமணனுடன் வனவாசம் மேற்கொண்டபோது இலங்கை வேந்தன் இராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச்சென்றான். சீதையைத் தேடி லட்சுமணனுடன் வனத்தில் அலைந்த ராமபிரான், முடிகொண்டான் என்ற இடத்தில் சர்வமுக்தி விநாயகரை வழிபட்டு ‘தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றியடைய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த விநாயகர் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முடிகொண்டான் கிராமத்தில் அருள்புரிகிறார். அதற்குப்பின் சீதையைத் தேடி அலைந்த ராமனுக்கு வனத்தில் அனுமனின் நட்பு கிடைத்தது.
கடல் கடந்து இலங்கை சென்ற அனுமன் அங்கு அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்துவந்து செய்தி சொன்னான்.
இலங்கைமீது போர்தொடுக்க முடிவு செய்த ராமபிரான் முதலில் ‘ஆதி’ எனப்படும் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு வந்தார். அங்கு எழுந்தருளியுள்ள விநாயகர் பெருமானை வழிபட்டு ஆசிபெற்றார். இதனால், அந்த விநாயகருக்கு ‘இலக்கு அறிவித்த விநாயகர்’ என்று பெயர். கோடியக்கரையிலிருந்து இலங்கை செல்வது எளிது என்பதால் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார்.
வங்கக்கடலை எப்படிக் கடக்கலாம் என்று திட்டமிடுவதற்காக அங்கிருந்த உயர்ந்த மணல் மேட்டின்மீது ஏறிநின்று பார்த்தார். அப்போது, இராவணனது அரண்மனையின் பின்புறம் அவர் கண்களுக்குத் தென்பட்டது. ‘பின்புற வாயிலை நோக்கிச் செல்வது வீரனுக்கு அழகல்ல ; எதிரியை முதுகில் குத்துவதற்குச் சமமானது ’ என்றெண்ணிய ராமபிரான் அரண்மனையின் முன்பக்கமாகவே செல்ல விரும்பினார். அதன்பின்னரே ஆதிசேதுவை ராமர் (ராமேஸ்வரம் பகுதி) தேர்ந்தெடுத்தார் என்று ராமாயணம் கூறுகிறது.
கோடியக்கரையில் ராமர் நின்று இலங்கையைப் பார்த்த இடத்தில், அந்தச் சம்பவத்தின் நினைவாக அழகிய மண்டபம் ஒன்றைக் கட்டி, அதில் ராமர் பாதத்தையும் நிறுவியிருக்கிறார்கள். இங்கு வருபவர்கள் இதை தரிசிக்கத் தவறுவதில்லை. தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் கடலில் நீராட வரும் பக்தர்கள் ராமர் பாதத்தைத் தரிசிப்பது வழக்கம்.
ராமபிரான் கடலில் பாலம் அமைக்க கந்தமாதன பர்வதம் (ராமேஸ்வரம்) என்ற இடத்திற்கு வரும்போது, வழியில் அங்கு எழுந்தருளியுள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகரை தரிசித்து, தான் மேற்கொண்ட காரியம் வெற்றியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அதன்பின் தேவிப்பட்டினம் கடலில் நீராடிய ராமபிரான். அருகிலிருந்த அரசமரத்தடியில் எழுந்தருளியுள்ள துர்க்கையை வழிபட்டு ‘தான் மேற்கொள்ளும் செயல்கள் வெற்றியடைய வேண்டும்’ என்று வேண்டினார்.
அப்போது, ‘ராமா! நீ தெய்வீகப்பிறவியாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால், பூலோகவாசிகள் அனுபவிக்கும் நவகிரக தோஷங்கள் உன்னைச் சூழ்ந்துள்ளன. அதன்விளைவால் உனக்கு பல வழிகளில் தடைகளும் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய அருகிலுள்ள கடலில் நீராடி, அங்கு நவகிரகங்களை நிறுவி வழிபட்டால் உன் கிரகதோஷங்கள் நீங்கும். நீ எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்’ என்று துர்க்கை அசரீரியாக அருளினாள். ராமபிரான் மீண்டும் கடலில் நீராடி, நவபாஷாண கற்களைக்கொண்டு, கடலில் நவகிரகங்களை நிறுவி வழிபட்டார். பின் கந்தமாதனபர்வதம் சென்றார் என்று வரலாறு கூறுகிறது.
தேவிப்பட்டினம் திருத்தலம் தோன்றியது குறித்துப் புராண வரலாறு உண்டு. மகிஷாசுரன் என்ற அரக்கன், தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி தேவர்களையும் மற்றவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க பராசக்தி புறப்பட்டாள். பராசக்தி வருவதைக் கண்ட மகிஷாசுரன் ஓடிவந்து சக்கர தீர்த்தத்தில் ஒளிந்துகொண்டான். இதனையறிந்த பராசக்தி சக்கரத் தீர்த்தத்தில் உள்ள நீரினை வற்றச் செய்து, மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து, அவனுக்கு சாபவிமோசனம் தந்தாள். இதனைக்கண்டு தேவர்கள் மகிழ்ந்து, அன்னை பராசக்தியைப் போற்றி வழிபட்டனர். பின்னர், பராசக்தி - மகிஷாசுரனை அழித்த இடத்தில் தன் பெயரிலேயே நகரை உருவாக்கி, உலக நாயகியம்மனாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள். அன்று முதல் அந்த நகரம் தேவிநகர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கி மருவி ‘தேவிப்பட்டினம்’ என்று தற்போது அழைக்கப்ப்பட்டு வருகிறது. இத்திருத்தலம் ராமநாதபுரத்திலிருந்து வடக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆரவாரமில்லாத கடலின் நடுவே ராமபிரான் நவபாஷாணக் கற்களால் அமைத்த நவநாயகர்கள் அருளாசி புரிகிறார்கள். வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள இந்தப்பகுதி சக்கரத் தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. இங்குள்ள நவபாஷாண நவகிரகங்களை பக்தர்கள் தங்கள் கையாலேயே அபிஷேகித்து வழிபடலாம்.
இந்தச் சக்கரத் தீர்த்தம் குறித்து இன்னொரு தகவலும் உண்டு.
முன்னொரு சமயம் காலவ ரிஷி தன் சரீரத்தை அடக்கி பல்லாயிரம் வருடங்கள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்தமன் என்ற அசுரன் பசியால் உணவுதேடி அலைந்துகொண்டிருந்தான். அப்போது, கடும்தவத்தில் ஆழ்ந்திருந்த காலவ ரிஷியைக் கண்டு அவரை விழுங்கிட நெருங்கிவந்து பலமாக உறுமினான். அந்த ஒலியைக் கேட்டு விழித்த காலவரிஷி திடுக்கிட்டு, மீண்டும் கண்களை மூடி விஷ்ணுவை வணங்கி தவத்தில் ஆழ்ந்தார். இதனைக்கண்ட மகாவிஷ்ணு முனிவரைக் காப்பாற்ற தன் சக்கரத்தை அனுப்பி துர்தமனை வதம் செய்தார். மேலும், அசுரனை அழித்த சக்கரத்தை எப்போதும் அங்கேயே இருக்கும்படி செய்தார். அந்த இடமே இப்போது மக்கள் நீராடும் புண்ணிய சக்கரத் தீர்த்தமாக இருந்து வருகிறது. இதனைக்கண்ட தேவர்கள் மகிழ்ந்து தேவலோகத்திலிருந்து அமிர்தத்தைப் பொழிந்தனர். இங்கு தர்மதேவனும் தவம் செய்து ஈஸ்வரனுக்கு வாகனமான ரிஷபமாகியதால், இதில் தர்ம தீர்த்தமும் கலந்துள்ளது. அதேபோல் காலவ ரிஷியும் இங்கு தவமிருந்ததால், காலவ தீர்த்தமும் கலந்துள்ளது. இவ்வாறு அமிர்த தீர்த்தமும், தர்ம தீர்த்தமும், சக்கர தீர்த்தத்தில் கலந்துள்ளதால் இங்கு நீராடினால் புனிதம் பெறலாம். நவபாஷாண நவகிரகங்களும் அமைந்துள்ளதால் தோஷங்கள் நீங்கி சுகம் பெறலாம் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
நவபாஷாண நவகிரகங்களை நிறுவி வழிபட்ட ராமபிரான், அங்கு கடற்கரைக்கு அருகில் தர்ப்பையில் அமர்ந்து தவம் மேற்கொண்டு, சமுத்திர ராஜனிடம் கடலில் வழிவிடும்படி பிரார்த்தனை செய்து அனுமதி பெற்றபின் பாலம் கட்டுவதற்கு தகுந்த இடம்தேடி தன் இளவலுடன் தென்திசை நோக்கிச் சென்றவர், ‘சுத்தமாதன பர்வதம் ’ என்ற சிறிய மலைப்பகுதிக்கு வந்தார். அந்த மலைமீது ஏறிப்பார்த்தார். அப்போது இராவணனது அரண்மனையில் முன்புறவாயில் தென்பட்டது. எனவே அந்த வழியாக இலங்கை செல்வதென்று தீர்மானித்தார் ராமபிரான். இந்த மலைமீது ஏறி ராமர் பார்த்ததாலும், இலங்கைமீது போர் செய்யும் முடிவை அவர் இங்கு எடுத்தாலும் இந்த மலைமீது ராமர் பாதம் வைத்துக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராமர்பாதம் உள்ள பகுதியிலிருந்து பார்த்தால் ராமேஸ்வரமும் சுற்றியுள்ள கடல் பகுதியும் நன்கு தெரியும். கந்தம் என்ற சொல்லுக்கு சந்தனம் என்று பொருள். பர்வதம் என்றால் மலை இந்த மலை சந்தன நிறத்தில் காட்சி தருவதால், கந்தமான பர்வதம் என்று பெயர் பெற்றது. இங்கு செல்வதற்கு மலை அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்குத் தாவிச்சென்றதும் இங்கிருந்துதான் என்று புராணம் கூறுகிறது. இறுதியாக வானரப்படைகள் உதவியுடன் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்று ராமபிரான், இராவணனுடன் போரிட்டு அவனை வதம் செய்து வெற்றி வாகைசூடி சீதையை மீட்டு வந்தார் என்பது ராமாயண நிகழ்வு. ராமர் இலங்கை செல்ல திட்டமிட்ட போது வழியில் தென்பட்ட விநாயகர் தலத்தையும் சிவத்தலங்களையும் வழிபட்டு வெற்றி பெற்றார் என்பது புராணச் செய்தி. நீதி தவறாமல் நேர்மையுடன் ராமபிரான் சென்றதால் வெற்றி கிட்டியது என்றும் புராணம் கூறுகிறது. நேர்வழியில் சென்றால் நாம் எடுக்கும் சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்பது ராமகாவியம் கூறும் கருத்துகளில் ஒன்று.
ராமநவமி கொண்டாடும் காலகட்டம், அனல் சுட்டெரிக்கும் வெயில் காலமென்பதால் தான் அன்று பானகம், நீர்மோர், விசிறி, தயிர் சாதம் சுண்டல் சித்ரான்னம், கோடைக்கு ஏற்ற ஆடைகள், காலணி, குடை போன்ற காலத்திற்கேற்ற தானமுறை வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தங்களுக்கு இயன்றதை வழங்கி இறையருள் பெறலாம். நாமத்தினைச் சொல்வதால் கிடைக்கும் பலன்கள் எண்ணிலடங்காதவை. ராம நாமம் கூற இடம், காலம், நேரம் வயது, ஜாதி, இனம், மொழி, பொழுது என்று வித்தியாசம் எதுவும் இல்லை. சாட்சாத் ஈஸ்வரனே இந்தத் தாரக நாமத்தைச் சொல்ல விரும்பி அனுமனாக அவதாரம் செய்தார் என்பார்கள். காசி ÷க்ஷத்ரத்தில் இன்றும் ஜீவன்களின் காதுகளில் முக்கண்ணன், ராமநாமத்தைச் சொல்லியே முக்தி அளிக்கிறாராம்.