ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தற்போதைய நிலை குறித்து, அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இதனையடுத்து வனத்துறை, அறநிலையத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உட்பட அரசுத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் உதயன், தினகர்குமார், ஸ்ரீவி., வன உயிரின காப்பாளர் முகமது சபாப், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி துரைகண்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, வன அலுவலர் கோவிந்தன், செயல் அலுவலர் விஸ்வநாத் உள்ளிட்ட குழுவினர், நேற்று காலை 6:00 மணிக்கு மலையடிவாரத்திலிருந்து புறபட்டு, நீர்வரத்து ஓடைகள், வழித்தட பாதைகள், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து விட்டு, மாலை 6:00 மணிக்கு அடிவாரம் திரும்பினர். இக்குழுவின் அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென கூறப்படுகிறது.