Advertisement

ராமாயணம் பகுதி - 17

அயோத்தி வாசிகள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். ஒரு தகப்பன் தனது மகன் துஷ்டனாக இருந்தால்கூட வீட்டைவிட்டு வெளியே அனுப்பமாட்டான். அப்படியிருக்கும்போது இந்த உலகத்தையே கவரும் சக்தியை உடைய நல்ல குணம் கொண்ட ஒரு மகனை காட்டிற்கு போகச்சொல்கிறான் என்றால் அவன் மன்னன்தானா? எங்கள் ராமன் வேத சாஸ்திரங்களை அருமையாக படித்திருக்கிறார். யாரையும் எடுத்தெறிந்து பேசமாட்டார். அஹிம்சையே அவரது கொள்கை. மனதை அடக்கியவர். இந்திரியங்களை வசப்படுத்தியவர். அப்படிப்பட்ட மகானை இந்த சக்கரவர்த்தி வெளியே அனுப்புகிறார் என்றால் அவருக்கு நாங்கள் என்ன பெயரிட்டு அழைப்பது? இவர் இவ்வூரை விட்டு போய்விட்டால், கோடை காலத்து மரம், செடி, கொடிகளைப்போல இந்த நாட்டு மக்கள் அனைவருமே வாடிப்போய் விடுவோமே! பூக்களும், பழங்களும் நிறைந்த ஒரு மரத்தின் வேரை அறுத்துவிட்டால் அது எப்படி சருகாகிப் போகுமோ, அதுபோல் எங்கள் முகமும் காய்ந்துபோகுமே! இவ்வுலகில் தர்ம சொரூபத்தைக் கொண்டவன் ராமன். அவன் மரத்திற்கு சமமானவன். நாங்கள் அவனோடு ஒட்டியுள்ள கிளைகளாகவும், பழங்களாகவும், பூக்களாகவும் இருக்கிறோம். எனவே, நாம் அனைவருமே நம் ராமனோடு போய் விடுவோம். அவன் தன் மனைவியோடும், தம்பியோடும் எங்கு வசிக்கப் போகிறானோ அங்கேயே வாழ்வோம். ராமனை பின்தொடர்ந்து செல்வோம். நம் வீட்டில் நாம் சேர்த்து வைத்துள்ள பொருட்களையும், தானியங்களையும் எடுத்துச் செல்வோம். நாம் போனபிறகு நம் வீடுகள் கவனிப்பார் இல்லாமல் ஆகிவிடும். அவை இடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். அந்த இடிபாட்டுக்குள் பாம்புகளும், எலிகளும் துளையிட்டு வாழட்டும். அவற்றை இந்த கைகேயி ஆளட்டும். நாம் சென்றுவிட்டால் இங்கே எந்த யாகமும் நடக்காது. பலி கொடுக்க ஆள் இல்லை. மந்திரங்கள் சொல்லி தேவர்களை அழைக்கவும் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே வசிக்கின்ற எல்லா தேவதைகளும் அகன்றுவிடும். தேவதைகள் இல்லாத நாட்டை பஞ்சமும், நோயும் பீடிக்கும், என்றனர். இவையெல்லாம் ராமனின் காதில் விழத்தான் செய்தது. அவர் தனது முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. யானை கம்பீரமாக நடந்துசெல்வதுபோல தன் தந்தையை சந்திக்க சென்றார். தந்தையார் இருந்த அறை வாசலில் அமைச்சர் சுமந்திரர் மற்றும் காவலர்கள் துக்கத்துடன் இருந்தனர். சுமந்திரரிடம் ராமர், அமைச்சரே! நான் என் தந்தையை பார்க்க வேண்டும். அவரது திவ்விய தரிசனத்திற்காக காத்திருக்கிறேன், என்றார். தந்தையிடம் சொல்லிக்கொண்டு சீதையுடன் காட்டிற்கு செல்ல அவர் உத்தேசித்திருந்தார். லட்சுமணனும் சீதையும் அவருடன் நின்றனர். சுமந்திரர் தசரதர் இருந்த அந்தப்புரத்திற்குள் சென்றார். அங்கே மகாராஜா மேகம் மறைத்த சூரியனைப்போல முகம் வாடிக் காணப்பட்டார். ராஜா முன்பு தலைதாழ்த்தி நின்று, அரசரே! தங்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகட்டும், என்று வாழ்த்தினார். சற்று நிறுத்தி விட்டு தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். ஐயனே! தங்களைக்காண தங்கள் புத்திரர் ராமன் தன் மனைவி சீதாபிராட்டியோடும், தம்பி லட்சுமணனோடும் நிற்கிறார். அவர் இப்போது காட்டிற்கு புறப்படப் போகிறார். தங்களைப்பார்க்க அனுமதி கேட்கிறார், என்றார். கலங்கிய கண்களுடன் தசரத சக்ரவர்த்தி, சுமந்தரரிடம், சுமந்திரா என்னுடைய மனைவிமார்களை இங்கே வரச்சொல். என் குழந்தை ராமனை அவர்கள் சூழ்ந்து நிற்கட்டும், என்றார். தசரதருக்கு அவரது பட்டத்தரசிகள் நீங்கலாக 350 மனைவிகள் உண்டு. அத்தனை பேரும் கலங்கிய கண்களுடன் அங்கு வந்து நின்றனர். ராமபிரானையும் உள்ளே சென்றார். மகனைக்கண்டதும் அவரை அணைத்துக்கொள்ள ஸ்ரீராமா என சொல்லியபடியே வேகமாக ஓடினார் தசரதர். அவரது கால்கள் இடறியது. மயக்கமாகி விழப்போனார். ராமனும், லட்சுமணனும் அவரை தாங்கிப் பிடித்தனர். ராஜபத்தினிகள் இதைக்கண்டு கதறினார்கள். அவர்களது அழுகை குரலும், அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் சத்தமும் அந்த இடத்தையே ஏதோ சூன்ய நிலையில் ஆழ்த்தியது. மருமகள் சீதா, மாமனாரை ராம லட்சுமணர் உதவியோடு படுக்கைக்கு கைத்தாங்கலாக தூக்கிச்சென்றாள். அவருக்கு மயக்கம் தெளிய ஒன்றரை மணி நேரம் ஆனது. ராமன் அவரை கைகூப்பி வணங்கினார். தந்தையே! தாங்கள் எனக்கு கடவுள் போன்றவர். நான் தண்டகாருண்யத்திற்கு புறப்படுகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்பி வையுங்கள். லட்சுமணனும் என்னோடு வருவதாக அடம்பிடிக்கிறான். நான் கட்டிய மனைவியும் கண்டிப்பாக வருவேன் என்கிறாள். எவ்வளவோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. எனவே அவர்களையும் அழைத்துசெல்கிறேன். எங்களை விட்டு பிரிவதற்காக தாங்கள் எவ்வித வருத்தமும் கொள்ள வேண்டாம், என்றார். தசரதர் ராமனிடம், நான் இந்த கைகேயியிடம் ஏமாந்தேன். அதற்காக உன்னைப் பலிகொடுப்பது நியாயமில்லாத ஒன்று. என்னை நீ ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நாட்டின் அரசனாகிவிடு, என்றார். ராமபிரானோ கொடுத்த வாக்கு தவறாதவர். சத்தியவேந்தர். தர்மம் தெரிந்தவர். தந்தை இப்படி சொல்கிறாரே என்று அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவரது கால்களை பிடித்துக்கொண்டு, அப்பா! நீங்கள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த பூமியை ஆளவேண்டும். நான் காட்டில் வசிக்கப்போகும் காலம் வெறும் 14 ஆண்டுகள்தான். பெற்றவனை சத்தியம் தவற வைத்த மைந்தன் என்ற அவப்பெயருக்கு என்னை ஆளாக்கி விடாதீர்கள். தாங்கள் சொன்ன காலம் முடிந்தவுடன் மீண்டும் தங்கள் பாதகமலங்களை சரணடைவேன், என்றார் பணிவாக. தசரதர் கண்ணீர் வடித்தார். உலகத்தையே ஆளும் மகாராஜாவால் அந்த சூழ்நிலையில் ஒன்றுமே செய்ய இயலவில்லை. வார்த்தைகள் குளறின.போய் வா என் செல்வ மகனே! தர்மத்தை கடைபிடித்த உனக்கு இந்த உலகத்தில் மட்டுமல்ல; எந்த உலகத்திற்கு சென்றாலும் நன்மையே கிடைக்கும். நீ போகும் பாதையில் குறுக்கிடும் விலங்குகளால் உனக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருக்கட்டும். சத்தியம் தவறாத நீ ஒன்றே ஒன்றை மட்டும் கேள். இப்போது இரவுப்பொழுதாகிவிட்டது. இந்நேரத்தில் கிளம்பிச் செல்லாதே. அதில் எனக்கு கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. விடிய விடிய என் அருகிலேயே அமர்ந்திரு. உன் தாய் கவுசல்யாவை நம் அருகில் வைத்துக் கொள்வோம். நாம் இன்று முழுக்க பேசுவோம். அதன்பிறகு அதிகாலையில் புறப்பட்டு சென்றுவிடு. இந்த ஒரு இரவாவது உன்னோடு தங்கியிருக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும். மகனே! உன்னை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற பிள்ளையை பெற்றவன் நிச்சயமாக சொர்க்கத்தை அடைவான். இங்கே நிற்கின்ற கைகேயியை பார். நான் அவளிடம் பிரியமாக இருந்த காரணத்தால் என்னை ஏமாற்றிவிட்டாள். மோசம் செய்துவிட்டாள். நம் குலப்பெருமையை கெடுத்துவிட்டாள். தர்மத்திற்கு பொருள் தெரியாத இந்த கேடு கெட்டவள் சொன்ன வார்த்தைக்கு நீ கட்டுப்பட்டு நிற்கிறாய் என்றால், உன்னைவிட இந்த உலகத்தில் உத்தமர் வேறு யார்? என்றவாறே மீண்டும் மூர்ச்சையானார்.

Advertisement
 
Advertisement