ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே, பாம்பனில், சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை, கடல் நீர் சூழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் பின்புறத்தில், சில நாட்களுக்கு முன், மண் அரிப்பு ஏற்பட்டது.தென்மேற்கு பருவக் காற்றால் பாம்பன், தனுஷ்கோடி தென் கடல் கொந்தளித்து, ராட்சத அலைகள் எழுகின்றன. நேற்று மண்டபத்தின் கிழக்கு, தென்பகுதி சுவர்களை ராட்சத அலைகள் சூழ்ந்தன.மண்டபத்தின் சுவர் பலவீனமாகி, கட்டடத்திற்கு ஆபத்து ஏற்படும் என்பதால், வரலாற்று நினைவு சின்னத்தை பாதுகாக்க, பாறாங்கல் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.