Advertisement

மேஷம்: சேமிப்பு உயரும்

ராசிக்கு 2ம் இடம் வரும் ராகுவால் லாபம், எட்டில் இணையும் கேதுவால் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். இதுவரை மூன்றில் இருந்த ராகு செப்.1 முதல் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். வாக்கு ஸ்தானம் என்பதால் கடும் வார்த்தைகள் பேசக்கூடும். பிறரது மனம் புண்படலாம் என்பதால் கவனமுடன் பேசுவது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரமப்படலாம். கோபத்தால் திட்டுவது அப்படியே நடக்கும். முடிந்தவரை நல்லதை பேசுங்கள். இதுநாள்வரை 9ல் இருந்த கேது விலகுவதால் மனதிலுள்ள விரக்தி மறையும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சியால் உங்கள் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்படும்.
குடும்பம்: உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் உயர்வடையும். அவர்களின் பெயரில் சொத்து வாங்கலாம். உறவினரால் செலவு ஏற்பட்டாலும் நிம்மதி கிடைக்கும். எட்டாமிட கேதுவால் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடும், அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்படலாம். குடும்பத்தினரை விட்டு பிரிய நேரலாம்.

தொழில்:அரசு, தனியார் பணியாளர்கள் இடம் மாறும் நிலை வரலாம். குடும்பத்தினரை விட்டு பிரியலாம். ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், இரும்பு விற்பனையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். நவ.15 வரை குருபார்வை ராசியின் மீது விழுவதால் பயப்படவேண்டாம். பின் குரு 10ம் இடம் வருவதால் தொழில்முறையில் கூடுதல் கவனம் தேவை.

நிதி நிலை:
ராகு நீசபலத்துடன் அமர்ந்தாலும் அதிக பணவரவால் சேமிப்பு உயர்வடையும். அசையாச் சொத்து, தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது பயன் தராது. ஜாதகத்தில் பலம் உள்ளவர்கள் ஷேர், மியூச்சுவல் பண்ட் மூலம் லாபம் காண்பர். ஏழைகளுக்கு உதவுதல், அன்னதானம், ஆன்மிகப்பணிகளுக்காக செலவழிக்க நேரிடும். மிக நம்பி இருந்த மனிதரால் ஏமாற்றப்படலாம்.

பெண்கள்: குடும்ப பிரச்னை உங்களால் தீரும். விலகிய உறவினரும் பகை மறந்து உறவாடுவர். வாழ்க்கைத்துணைவரின் சிக்கன நடவடிக்கை வருத்தம் தரலாம். நீங்களும் ஆடம்பர செலவை தவிருங்கள்.

மாணவர்கள்: அறிவுத்திறனில் மேம்படுவர். கல்விநிலையில் முன்னேற்றம் காண்பர். அசாத்தியமான ஞாபகசக்தி துணை நிற்கும். வேகமாக எழுதக் கற்றால் தேர்வில் அதிக மதிப்பெண் நிச்சயம். தாவரவியல், விவசாயம், புவியியல் படிப்பவர்கள் அபரிமித வளர்ச்சியடைவர்.

உடல்நிலை : உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டு தேவை. ராகு, சுக்ரன் சேரும் காலத்தில் சிலர் கண்ணில் அறுவைசிகிச்சை செய்ய நேரிடும். பல்வலி, வாய்ப்புண், சரும நோய் வர வாய்ப்புண்டு.

பரிகாரம்:
* சதுர்த்தியன்று விநாயகருக்கு தீபமேற்றுதல்
* ஏழைகளுக்கு உணவு, உடை தானமளித்தல்
* தினமும் நீராடி விநாயகர் அகவல் படித்தல்

Advertisement
 
Advertisement