Advertisement

நாளை மஹாளய பட்சம் துவக்கம்: வாழ்த்த நம் வாசலில் காத்திருக்கும் முன்னோர்கள்!

ஆசி வழங்க முன்னோர் நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் காலம் தான் மஹாளய பட்சம். புரட்டாசி பவுர்ணமி துவங்கி அமாவாசை வரையிலான இந்த 15 நாட்கள் முன்னோருக்காக நாம் விரதம் இருக்க வேண்டிய காலம். இந்த ஆண்டு நாளை (செப்., 2) துவங்கி, செப்.,17 அமாவாசையன்று நிறைவு பெறுகிறது. இறந்த முன்னோர், பித்ருகள் எனப்படுகின்றனர். எதை துவங்கினாலும் முன்னோரின் ஆசி இருந்தால் வெற்றி கிடைக்கும். பலவித யோகங்கள் ஜாதகப்படி இருந்தாலும், பித்ரு தோஷம் இருந்தால் வெற்றி கிடைக்காது.

பரிகாரங்கள் செய்தாலும் பித்ருகளை திருப்திப்படுத்தாமல் பலன் கிடைக்காது. அவர்களை திருப்திப்படுத்தினால் தான் குலதெய்வ அருளே கிடைக்கும். குல தெய்வத்திற்குப்பின் தான் இஷ்ட தெய்வங்கள், பரிகாரங்கள். மஹாளயபட்சத்தின் போது நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடி பித்ருக்கள் வருகிறார்கள். இந்த 15 நாளில் ஒரு நாள் தர்ப்பணம் செய்தால் 14 ஆண்டுகள் சேர்த்த பாவம் தீரும். எந்த மதம், ஜாதி, மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மகாளய பட்ச காலத்தில் தானம் செய்ய வேண்டும்.

* இந்த 15 நாளும் அசைவம் சாப்பிடக்கூடாது.
* சைவ உணவிலும் வெங்காயம், பூண்டினை தவிர்க்க வேண்டும்.
* தந்தை இறந்த திதியன்று (தேதி அல்ல) தர்ப்பணம் செய்வது சிறப்பு. அது தெரிய வில்லை எனில் தாய் இறந்த திதியில் செய்யலாம்.
* இருவரது திதியும் தெரியவில்லையெனில் மஹாபரணி (செப்.,7), மத்தியாஷ்டமி (செப்.,10)யில் செய்யலாம்.
* மகாளய பட்ச தர்ப்பணத்தின் மற்றொரு சிறப்பு, இந்த நாளில் மட்டுமே தாய், தந்தை தவிர தாய் வழி உறவினர்கள், தந்தை வழி உறவினர்கள் என அனைத்து முன்னோருக்கும் தர்ப்பணம் தருகிறோம். இதுவரை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஆண்டு செய்யுங்கள். நல்ல மாற்றங்களை கண்கூடாக காண்பீர்கள்.

இறந்தவருக்கு ஆண்டுதோறும் திதி கொடுக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட திதியன்று (தேதி அல்ல... தமிழ் மாதம், வளர்பிறை திதி அல்லது தேய்பிறை திதி என பார்க்க வேண்டும்) இறந்தவர் நம் வீட்டு வாசலில், நாம் தரும் உணவிற்காக காத்து நிற்பர். தரவில்லையெனில் கோபமடைந்து சபித்துவிட்டு செல்வர். இதுதான் பித்ரு சாபம். தர்ப்பணம் செய்வது மட்டுமின்றி வறுமையில் இருப்பவர்களுக்கு அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, மைதா, கனிகள், உணவு வகைகள், உலர்ந்த கனிகள், ஆடைகள், ஆபரணங்கள், பாதணி என தானம் அளிக்கலாம். கடல், ஆறு போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்வது நல்லது. கோயிலிலும் தர்ப்பணம் தரலாம். முடியவில்லையெனில் வேதம் படித்தவர்களை வரவழைத்து வீட்டில் தர்ப்பணம் தரலாம். பித்ருகளின் அருள் பெற தர்ப்பணம் செய்யுங்கள்.

Advertisement
 
Advertisement