திருப்புல்லாணி: திருவண்ணாமலை கிரிவலம் செல்வது பிரசித்தி பெற்றது ஆகும். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வரை தமிழக அரசு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கவில்லை. எனவே தமிழக அரசு தடையை விலக்கி கிரிவலம் பாதை செல்ல வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணாமலையார் கிரிவலம் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க திருத்தணி கூறியதாவது;
தற்போது தமிழக அரசு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் சுற்றுலாத்தலங்கள், சினிமா தியேட்டர் வழிபாட்டுத்தலங்கள் போன்றவை ஒவ்வொன்றாக திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல அனுமதி இல்லாததால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். எனவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலையில் சமூக இடைவெளியோடு கிரிவலம் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.