Advertisement

சக்தி மாரியம்மன், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சூலூர்: அப்பநாயக்கன்பட்டி பெரிய விநாயகர், சக்தி மாரியம்மன், கரி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் உள்ள சித்தி புத்தி சமேத பெரிய விநாயகர், அரசமரத்தடி விநாயகர், பால விநாயகர், பாலமுருகன், பூமிநீளா சமேத கரிவரதராஜ பெருமாள், சக்தி மாரியம்மன் கோவில்கள் பழமையானவை. கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 13 ம்தேதி புண்யாக வாஜன பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 14 ம்தேதி கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம் நடந்தது. நான்கு கால ஹோமங்கள் மற்றும் பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. தொடர்ந்து, விநாயகர், பால முருகன்,சக்தி மாரியம்மன், பூமிநீளா சமேத கரிவரதராஜ பெருமாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேக, தீபாராதனை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement