Advertisement

கோவில் நில அபகரிப்பு பத்திரங்கள் ரத்து; அதிரடிக்கு தயாராகும் பதிவுத்துறை

சென்னை : கோவில் நிலங்களை அபகரித்தோர் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய, பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

பல இடங்களில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து, தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து, அதன் அடிப்படையில் விற்பனை செய்வதிலும் ஈடுபடுகின்றனர். தனியாரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை, அறநிலையத்துறை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி கோவில் நிலங்களின் பட்டாவில், T என்ற ஆங்கில எழுத்தை அடையாளமாக குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.

இது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், தானமாக வழங்கப்பட்ட நிலங்கள், கோவில் பெயரில் உள்ள பட்டா நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் என மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த வகைபாடுகளில் வரும் நிலங்களை பாதுகாக்க வேண்டியது, சார் - பதிவாளர்களின் கடமை.எனவே, சார் - பதிவாளர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, இந்நிலங்கள் வேறு பெயர்களில் மோசடியாக பதிவாகி உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்களை, மாவட்ட பதிவாளருக்கு தெரிவித்தால், சம்பந்தப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்படும்.

இதில் காலதாமதம் செய்தால், கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புகார் அளிக்கலாம்இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவில் நிலங்கள், தவறான முறையில் வேறு நபர் பெயருக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.சார் - பதிவாளர்கள் வாயிலாக வரும் இத்தகைய விபரங்களையும், புகார்களையும் கவனமுடன் பரிசீலித்து, மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் நிலங்கள் தொடர்பான சர்வே எண் விபரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வையில் படும்படி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி கோவில்களின் நிர்வாகிகள், இது விஷயத்தில் உரிய புகார்களை, சார் - பதிவாளர், மாவட்ட பதிவாளர்களுக்கு தெரிவிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement