பழநி: பழநியில் பருவதராஜகுல மகாஜன சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி துவங்கியது. பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு எடப்பாடி பருவதராஜகுல மகாஜன சமுதாயத்தினர் இன்று பழநி மலை கோவிலில் தங்க உள்ளனர். 350 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி மலைக்கோயிலுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து காவடி எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு இன்று மலைக்கோயிலில் தங்க உள்ள நிலையில் அவர்களுக்கான பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
10 டன் அளவிலான மழை வாழைப்பழங்கள், 30 முதல் 50 கிலோ வரை எடையுள்ள 130 மூடை கரும்புச் சர்க்கரை, தேன், காவடியில் கொண்டுவரப்படும் பொருட்கள், நேய், கல்கண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து 20 டன்னுக்கு மேல் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று மலைக்கோயிலில் பழங்களை உரித்து பஞ்சாமிர்தம் கலக்கத் துவங்கியுள்ளனர். அதேபோல் பழனி அடிவாரம் பகுதியிலும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மலைக்கோயிலில் பூ கோலமிட்டு பழநி ஆண்டவனை வழிபட்டு தங்க உள்ளனர்.