Advertisement

ஜெகன்நாதர் ரத யாத்திரை புரியில் கோலாகல துவக்கம் : 9ம் தேதி வரை நடக்கிறது

புரி:ஒடிசாவின் புரியில், பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரைகோலாகலமாக துவங்கியுள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, புரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் ரத யாத்திரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரோனா பரவல் காரணமாக, 2020,2021ம் ஆண்டுகளில் ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, ஜெகன்நாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோருக்காக புதிதாக தயாரிக்கப்பட்ட ரதங்கள், நேற்று முன்தினம் ரதம் புறப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.யாத்திரை புறப்படுவதற்கான பூஜைகள் நடந்தபின், ரதங்களில் ஜெகன்நாதர், பாலபத்திரர்,சுபத்திரை ஆகியோர் எழுந்தருளினர். கவர்னர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.ரத யாத்திரை துவங்கியதையடுத்து, புரி நகரமே விழாக்கோலம் பூண்டு, பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியதை ஒட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,மக்கள் அனைவரும் ஆரோக்கிய மாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ, ஜெகன்நாதரை பிரார்த்திக்கிறேன், என, கூறியுள்ளார்.
பிரசித்தி பெற்ற ரத யாத்திரை: ஆனி) பௌர்ணமி அன்று ஜகந்நாதன், பலராமன், சுபத்திரா* மூவரும் 108 குடங்கள் தீர்த்தத்தில் திருமஞ்சனம் கண்டருள்வார்கள். அதாவது வருடத்தில் ஒரு முறை மூலவ விக்ரஹங்கள் வெளியில் வந்து ஸ்நான வேதியில் குளித்தலே ஸ்னான யாத்திரை* எனப்படுகிறது. நிறைய நேரம் தண்ணீரில் விளையாடிக் குளித்ததில், மூவருக்கும் ஜலதோஷம், ஜுரம் போன்றவை வந்துவிடுகின்றன. அதனால் ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ கஷாயம் கொடுத்து, பலராமன், சுபத்திரா, ஜகந்நாதனை தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர். அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து கஷாயம் மட்டுமே பகவானுக்கு நிவேதனம் செய்யப்படும். இந்த 2 வாரம் பகவானை யாரும் தரிசிக்க இயலாது.

இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஜகந்நாதனின் மூர்த்திகள், ஜகந்நாதன் படங்கள் ஆகியவற்றை வெள்ளை துணியிட்டு மூடி வைப்பார்கள். ஆஷாட (ஆடி) அமாவசை வரையிலான இந்த 14 நாட்கள், பக்தர்களுக்கு கோயிலில் தரிசனம் அனுமதியில்லை. ஆஷாட (ஆடி), சுக்லபக்ஷ வளர்பிறை, பிரதமை (முதல்நாள்) கோவில் திறக்கப்படும். ஜகந்நாதன், பலராமன், சுபத்திரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள். *அதற்கு நபயௌவன (புதிய இளமை) தரிசனம்* என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும். அதற்கு அடுத்த நாள் பலராமன், சுபத்திரா, ஜகந்நாதன் மூவரும், கோயிலைவிட்டு வெளியில் வந்து பக்தர்களுக்காக ரதயாத்திரை கண்டருள்வார்கள். அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற *பூரி ஜெகந்நாத ரத யாத்திரை. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.

Advertisement
 
Advertisement