பரமக்குடி: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி வீடுகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள்(அழகர்) கோயில் ராஜ கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக மேள தாளம் முழங்க தேசிய கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் கோபுரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பரமக்குடி ஈஸ்வரன் கோயில் ராஜா கோபுரத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தேசியமும் தெய்வீகமும் என்ற வகையில் கோயில் கோபுரங்களில் கொடி ஏற்றப்பட்டதை பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.