Advertisement

நரசிங்கம்பட்டியில் மண் மலையான கார்த்திகை திருவிழா

மேலுார்: மேலூர், நரசிங்கம்பட்டியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண் மலையான திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவாரத்தில் மலைகோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மழை பெய்து எல்லா வளமும் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் முடிகாணிக்கை செலுத்தி கோயில் முன் உள்ள சேங்கையில்(ஓடை) புனித நீராடினார்.பிறகு அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபாடு செய்தனர். இவ்வாறு ஆண்டு தோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இம் மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி வந்து முடிகாணிக்கை செலுத்தினர். இதே போல் சோமகிரி மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அரிவாளை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement