Advertisement

வனபத்ரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் மீது புகார்

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில், பரம்பரை அறங்காவலர், நிர்வாக சீர்கேட்டால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேக்கம்பட்டி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த, தேக்கம்பட்டி 23 கிராம விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தலைவர் பாண்டுரங்கன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இது ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஆனால் கோவில் பரம்பரை அறங்காவலராக வசந்தா உள்ளார். இவர், செயல்பாடுகளில் சுயநலம் மற்றும் உள்நோக்கத்தோடு கூடிய, ஆதாய நோக்கில் செயல்பட்டு வருகிறார். இதனால் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

கோவில் ஸ்தல வரலாறு புத்தகம் அச்சிட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பக்தர்களுக்கு புத்தகம் விற்பனை செய்யாததால், கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பரம்பரை அறங்காவலரின் சரியான நடவடிக்கை இல்லாததால், ராஜகோபுர திருப்பணிகள் பாதியில் நிற்கிறது.கோவிலில் காலியாக உள்ள பூசாரிகள், அலுவலக ஊழியர் பணியிடங்களுக்கு, பல ஆண்டுகளாக புதிதாக நிரந்தர பணியாளர்கள் நியமிக்கவில்லை. மாறாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டத்திற்கு புறம்பாக தற்காலிகமாக, தகுதி இல்லாத நபர்களை, 89 நாட்கள் கணக்கில் நியமித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே முறையை செயல்படுத்தி வருகிறார். இதனால் கோவிலில் வளர்ச்சி பணிகளும், ஆன்மீக பணிகளும் தொய்வு அடைந்துள்ளது. மேலும் கோவில் பணியாளர்கள் மீது, பழி வாங்கும் நடவடிக்கையாக, பணிவு ஓய்வு பெறும் வரையிலும், அவர்கள் மீதுள்ள புகார்களை, விசாரணை செய்து முடிக்காமல், நிலுவையில் வைத்து வருகிறார். அவர்கள் பணி ஓய்வின்போது, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்கள் ஏதும் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நெல்லையப்பன், மன உளைச்சலால் இறந்தார். இது சம்பந்தமாக, பரம்பரை அறங்காவலர் மீது புகார்கள், உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே முதல்வர் மற்றும் ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆகியோர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, கோவில் வளர்ச்சி மற்றும் பக்தர்களின் நலன் கருதி, பரம்பரை அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.

இது குறித்து பரம்பரை அரங்காவலர் வசந்தாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானமையாகும். கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட தடைபட்டதற்கு, கோவில் உதவி கமிஷனர்கள் தான் காரணம். ராஜகோபுரம் கட்ட துவங்கிய போது, ஜி.எஸ்.டி., இல்லை. அதன் பிறகு ஜி.எஸ்.டி., வந்ததால், அந்தத் தொகையை, கோவில் நிர்வாகம் தான் வழங்க வேண்டும். ஆனால் அந்தத் தொகை வழங்காததால், ஒப்பந்ததாரர் கோர்ட்டில் வழக்கு போட்டார். அதனால் கட்டுமான பணிகள் தடைப்பட்டது. ராஜகோபுரம் திருப்பணிகளை மீண்டும் துவக்கி, விரைவாக செய்யும்படி, தீர்மானம் நிறைவேற்றி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் அரசுக்கு பலமுறை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசின் விதிமுறைப்படி, 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் படி முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்த நிலையில், திடீரென கோவில் ஊழியர்களுக்கு, 45 வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என, அரசு அறிவித்ததன் பேரில், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இறுதி நாளுக்கு பிறகு அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து, ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பரம்பரை அரங்காவலர் கூறினார்.

Advertisement
 
Advertisement