Advertisement

முத்தாளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!

மோகனூர்: மேலப்பேட்டப்பாளையம், முத்தாளம்மன் கோவில் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூர் யூனியன், மேலப்பேட்டப்பாளையத்தில், முத்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 27ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து, தினமும் காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். கடந்த, 2ம் தேதி காலை, கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது.நேற்று முன்தினம் காலை, 6 மணிக்கு, பூக்குழி பூஜை நடந்தது. மதியம், 2 மணிக்கு, காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு, தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.அன்று இரவு, 7 மணிக்கு, பொங்கல் பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, கிடா வெட்டு நிகழ்ச்சியும், இரவு, 7 மணிக்கு, மாவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement