கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நடந்து வருகிறது. எட்டாம் நாளான நேற்று அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்பட்டார். தலைமைப்பதி தலைமை குரு பால ஜனாதிபதி தலைமை வகித்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியை சுற்றிவந்த வாகனம் முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தர்கள் கோஷம் முழங்க அய்யா வைகுண்டசாமி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. முத்திரி கிணற்றங்கரையில் பக்தர்களுக்கு பதம் வழங்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்டகுதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு சென்று இரவு 9மணிக்கு சாமிதோப்பு தலைமைப் பதியைவந்தடைந்தது. இரவு வடக்கு வாசலில் அய்யாவை குண்ட சாமியின் தவக்கோலகாட்சி நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு அனுமன் வாகனபவனியும், நாளை இந்திர வாகனத்தில் பவனியும் நடக்கிறது. 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.