Advertisement

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் துாக்கத்திருவிழா: துாக்கமரத்தில் ஏறிய 1352 குழந்தைகள்

நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற துாக்க திருவிழாவில் 1352 குழந்தைகள் துாக்கமரத்தில் ஏற்றப்பட்டு துாக்க நேர்ச்சை நிறைவு செய்யப்பட்டது. தமிழக –கேரள எல்லையான கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் துாக்கத்திருவிழா கடந்த 16–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குழந்தைகள் பிறக்கவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் இந்த கோயிலில் துாக்கம் நடத்துவதாக தேவியிடம் பெற்றோர் வேண்டுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1352 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர். இரண்டு சக்கரம் கொண்ட தேரில் 41 அடி உயரத்தில் இரண்டு துாக்க மரம் பொருத்தப்பட்டு அதில் நான்கு துாக்க வில்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வில்களில் நான்கு விரதமிருந்த துாக்ககாரர்களின் இடுப்பை இணைத்து துணிகளால் கட்டிய பின்னர் நேர்ச்சை குழந்தைகளை அவர்கள் கையில் தாங்கி பிடித்ததும் துாக்க மரம் விண்ணை நோக்கி எழும்பும். இந்த தேர் கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் குழந்தைகள் இறக்கப்பட்டு கோயில் நடையில் வைத்து புனித நீர் தெளிக்கும் போது துாக்க நேர்ச்சை நிறைவு பெறும். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தொடங்கிய துாக்க நேர்ச்சை இன்று அதிகாலையில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் தேவி ஆராட்டுடன் விழா நிறைவு பெற்றது.

Advertisement
 
Advertisement