Advertisement

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் மழலையர்கள் வேடமிட்டு வீதியுலா

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா வீதியுலாவின் போது மழலையர்கள் பலரும் தெய்வங்கள் வேடமிட்டு வலம் வருவதை வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த ஞாயிறன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காலை,இரவு என இரு நேரங்களில் காட்சியளிப்பது வழக்கம். தினசரி சுவாமி வீதியுலாவின் போது பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிவன், முருகன், விநாயகர், மதுரை மீனாட்சி உள்ளிட்ட தெய்வங்கள் வேடமிட்டு வீதியுலாவின் போது அழைத்து வருகின்றனர். இளைய தலைமுறையினரிடம் கடவுள் பக்தி குறைந்துவரும் வேளையில் பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு வேடமிட்டு அழைத்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது. கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதியுலாவின் போது அம்மன் வாகனத்தில் மதுரை மீனாட்சி போன்று சிறுமிக்கு வேடமிட்டு அமர்த்தியிருந்ததை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இதுபோன்ற செயல்கள் மூலம் இளைய தலைமுறையினருக்கு கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், கடவுள் வேடமிட்டு வலம் வருவதால் எதிர்மறை சிந்தனைகள் விலகி நல்வழியில் செல்லும் எண்ணம் வளர வாய்ப்புண்டு.

Advertisement
 
Advertisement