Advertisement

தேனூரில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கினார்

சோழவந்தான்: தேனூரில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி உற்சவ விழா மே.19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே.3ல் கள்ளழகர் திருக்கோலத்தில் திருமஞ்சனம் சாற்றி வீதியுலா புறப்பாடு நடந்தது. இதையடுத்து சுவாமி இன்று குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கி அங்குள்ள மண்டகப்படியில் எழுந்தருளினார். இன்று மே.5ல் கள்ளழகர் கருட வாகனத்தில் மண்டூகமான தபஸ் மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். நாளை மே.6ல் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் ஆற்றிலிருந்து பல்லக்கில் வீதியுலா புறப்பாடுடன் கோயில் வந்தடையும் நிகழ்வு நடைபெறும். இவ்விழாவில் வெளியூர் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன், விழாக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் கூறியதாவது: இவ்விழா 364 ஆண்டுகளுக்கு முன்பு பலநூறு ஆண்டுகள் இங்கு நடந்தது. இதனை கடந்த 2008ல் இருந்து பழங்கால முறைப்படி இங்குள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு விழா நடத்தி வருகிறேன். இக்கிராம மக்களில் பெண்கள் ஏராளமானோர் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று பிரசாதம் பெற்றுச் சென்றனர். இனிவரும் சித்திரை திருவிழாவின் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியாவது இக்கிராமத்தில் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Advertisement
 
Advertisement