Advertisement

மத துறவியாகிறார் 13 வயது சிறுவன்!

குல்பர்கா: தாத்தாவுடன் மதகுருவை சந்திக்க சென்ற, 13 வயது சிறுவன், மதகுருவை சந்தித்த உடனேயே, துறவியாக போகிறேன் என, தெரிவித்து விட்டார். வரும், 1ம் தேதி, அவருக்கு, தீக்ஷை அளிக்கப்பட உள்ளது.கர்நாடக மாநிலம், குல்பர்காவை சேர்ந்தவர் அஸ்வின்குமார் சோராடியா, தொழிலதிபர்; ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு, 13 வயதில், குவாய்ஷ் என்ற மகன் உள்ளார்.ஜெயின் மதத்தினரின், ஸ்வதம்பரர் தேராபந்த் பிரிவை சேர்ந்த இவர், தன் மகனை, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராஜஸ்தான் அனுப்பி வைத்துள்ளார். தாத்தா, அசோக் சேத்தியாவுடன், ராஜஸ்தான் சென்ற குவாய்ஷ், மதகுரு மகாசர்மானுடன் பேசியுள்ளார்.ஏராளமான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்ற சிறுவன் குவாய்ஷ், வெளியே வந்ததும், தான் துறவியாக போவதாக, தாத்தாவிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அசோக் சேத்தியா, தன் பேரனுடன், குல்பர்கா திரும்பினார். அங்கு வந்த பின்னரும், மத வழிபாடுகளிலும், பூஜைகளிலும் அதிக விருப்பமாக இருந்த சிறுவன், தன்னை துறவியாக மாற்ற உதவுமாறு, பெற்றோரிடம் கேட்டு கொண்டான். இதையடுத்து, சுவாமியை சந்தித்த குவாய்ஷ் குடும்பத்தினர், 13 வயது சிறுவனை துறவியாக்க, மத கோட்பாடுகள் அனுமதிக்கிறதா? என, கேட்டுள்ளனர். எத்தனை வயதாக இருந்தாலும் பரவாயில்லை, சிறுவனின் விருப்பமே முக்கியம் என, தெரிவித்த, சுவாமி மகாசர்மான், சிறுவன் குவாய்ஷை துறவியாக்க சம்மதித்தார்.எனினும், தொடர்ந்து படிக்க, அவனை அனுமதித்த அவர், துறவியாவதற்கு முந்தைய பயிற்சி அளித்து வருகிறார்.வரும், 1ம் தேதி குவாய்ஷ், ஜெயின் மத துறவியாகிறார். கடைசியாக தன் வீட்டுக்கு, சில நாட்களுக்கு முன் வந்த குவாய்ஷ், தன் உறவினர்களுடன் தங்கியிருந்த போதிலும், தினமும் பூஜை, வழிபாடு செய்ய தவறவில்லை. பாலோதரா என்ற இடத்தில், குவாய்ஷ்சுக்கு, தீக்ஷை வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Advertisement
 
Advertisement