Advertisement

பழநி படிக்கட்டில் குவியும் சூட மெழுகு: பக்தர்கள் பாதிப்பு!

பழநி: பழநி மலைக்கோவில் யானைப் பாதை, படிக்கட்டு பாதைகளில், சூடம் ஏற்றுவதால், ஏராளமான மெழுகு படிந்துள்ளது. இதனால், பாதயாத்திரை பக்தர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் பழநி கோவிலில் யானைப் பாதை, படிப் பாதை என, பக்தர்கள் மலையேற, இரு வழிகள் உள்ளன. இவ்விரு வழிகளில் உள்ள மண்டபம், படிக்கட்டுகளில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாத விநாயகர் கோவிலில் ஆரம்பிக்கும், சூடம் ஏற்றும் வழிபாடு, மலைக்கோவில் கடைசி படிக்கட்டு, இரட்டை விநாயகர் கோவில், வெளிப் பிரகாரம் வரை தொடர்கிறது. இதன் காரணமாக, கற்பூரத்தின் மெழுகு படிகளில் அதிகளவில் படிந்துள்ளது. பழநி கோவிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. படிக்கட்டுகளில் கற்பூரம் முழுமையாக எரியாததால், அவ்விடங்களில் சூட மெழுகு படிந்துள்ளது. இதனால், பக்தி பரவசத்துடன் செல்லும் பக்தர்கள் சிலர், ஏறும் போதும், இறங்கும் போதும் வழுக்கி விழுகின்றனர். படிக்கட்டுகளில் சூடம் ஏற்றுவதை தவிர்க்க வலியுறுத்தி, ஒரு சில இடங்களில் மட்டுமே, அறிவிப்பு பலகை உள்ளது. எனவே, பாதுகாப்பு ஊழியர்கள் மூலம், கற்பூரம் ஏற்றும் பக்தர்களை எச்சரிக்கை செய்யலாம். ஜன., 21ல், தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால், பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை, மேலும் அதிகரிக்கும். ஆகையால், தேவஸ்தானம் படிக்கட்டுகளில் குவிந்துள்ள கற்பூர மெழுகுகளை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் வசூல் ரூ.4 கோடியை தாண்டியது: பொங்கலையொட்டி பழநி கோயில் வசூல் 4 கோடி ரூபாயை தாண்டியது. தைப்பூசத்திற்கு முன்னரே பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் திரண்டுள்ளனர். பழநி-திண்டுக்கல், பழைய தாராபுரம் ரோடு, புதுதாராபுரம் ரோடு, உடுமலை ரோட்டில் பல கி.மீ., தூரத்திற்கு பாத யாத்திரை பக்தர்களை தான் காண முடிகிறது. பொங்கலை முன்னிட்டு 5 நாட்களில் தரிசன, அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள், பஞ்சாமிர்த விற்பனை, தங்கரத புறப்பாடு காணிக்கை, வின்ச் மூலம் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியது. உண்டியல் திறப்பு: மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல்கள் எண்ணப்பட்டது. ரொக்கம் 2 கோடி ரூபாயை தாண்டியது. இது தவிர தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களும், வெளிநாட்டு கரனசிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் திறப்பின் போது, பழநி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் (அறநிலையத்துறை) ரமேஷ், முதுநிலை கணக்கியல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Advertisement
 
Advertisement