Advertisement

மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள்

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த திருவிச நல்லூர் பக்திப்பயிர் செழித்த புண்ணிய பூமி. அங்கு வாழ்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குலதெய்வமான வெங்கடேசரோடு, ராமனையும் சேர்த்து வேங்கடராமன் என பெயரிட்டனர். மூன்று வயது வரை குழந்தை பேசவில்லை. பெற்றோர் மனம் வருந்திய நேரத்தில், வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர், இந்தக் குழந்தையிடம் தெய்வீக சக்தி இருக்கிறது. இவன் நிச்சயம் பேசுவான். அதோடு ஒரு மகானாகவும் விளங்குவான், என்றார். திருவிசநல்லூர் அருகிலுள்ள மணஞ்சேரியில் கோபாலசுவாமி என்ற ராம பக்தர் இருந்தார். அவரிடம் குழந்தையை அழைத்துக் கொண்டு சுப்பிரமணியஐயர் சென்றார். இவனது குறை தீர்க்கும் மருந்து ஒன்று இருக்கிறது என்று சொல்லிய பக்தர், குழந்தையின் வலக்காதில் ராம என்ற மந்திரத்தை ஜெபித்தார். அதைக் கேட்ட வேங்கடராமன் எழுந்தான். பரசவம் அடைந்தவனாய் பேசும் திறன் பெற்றான். ஏழுவயதில் உபநயனம் செய்து வைக்க ஏற்பாடானது. தந்தை பிரம்மோபதேசம் செய்த போது, மனதிற்குள் ராமதரிசனம் பெற்றான். அந்தக்காட்சி மறைந்ததும், வேங்கடராமனால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினான். அன்று முதல் எப்போதும் ராமநாமமே ஜெபித்தான். தந்தையைக் குருவாக ஏற்று வேதம், சாஸ்திரம் கற்றான். சங்கீத வித்வானிடம் இசைப்பயிற்சியும் பெற்ற . இசையோடு சேர்ந்த நாம சங்கீர்த்தனமே சிறந்தது என்ற எண்ணம் வேங்கடராமனின் மனதில் வேரூன்றியது. ஜானகி என்ற பெண்மணியை மகனுக்கு பெற்றோர் மணம் செய்து வைத்தனர். ஒருநாள் ராமாயண உபன்யாசத்தில், ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே! அயோத்தியிலேயே உஞ்சவிருத்தி செய்தாவது இருக்கச் சொல் என்று தசரதரின் வேண்டு கோளைக் கேட்டதும், வேங்கடராமனின் உள்ளம் உருகியது. அன்று முதல் தானும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்த பொருளைக் கொண்டு வாழ்வு நடத்த எண்ணினார். மக்கள் அவரை சத்குரு சுவாமிகள் என்று அன்போடு அழைத்தனர். தினமும் லட்சத்து எட்டாயிரம் ராமநாமம் ஜெபித்து வந்தார். மனைவி ஜானகியுடன் சுவாமி அயோத்திக்கு நடந்தே யாத்திரை புறப்பட்டார். ஆந்திராவில், தாளபாக்கம் கிராமத்தை வந்தடைந்தார். அங்கிருந்த பாகவதர்களிடம் அன்னமாச்சாரியார் வகுத்த பாகவத சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு இரவில் தூங்கியபோது கனவில் போதேந்திர சுவாமிகள் என்பவர் தோன்றினார். இவர் நாமசங்கீர்த்தனம் மூலம் பக்தியைப் பரப்பியவர். அவர் சத்குரு சுவாமியிடம், உடனே தமிழகத்திற்கு போ! உன்னால் ஒரு மகத்தான செயல் ஆகவேண்டியிருக்கிறது, என்றார். அந்த சமயத்தில் காவிரியின் நடுவில் அமைந்திருந்த போதேந்திர சுவாமிகளின் அதிஷ்டானம் (சமாதி) மண் மூடி மறைந்து கிடந்தது. அதைக் கண்டுபிடித்து மீண்டும் சீரமைப்பதே தன் கடமை என்பதை உணர்ந்த சுவாமி, அயோத்தி பயணத்தை நிறுத்தி விட்டு தமிழகம் திரும்பினார். பக்தர்களுடன் அதிஷ்டானத் தைத் தேடும் பணியில் ஈடுபட்டார். அப்படி ஒரு பகுதியைப் பற்றி மக்களுக்கு ஏதும் தெரியவில்லை. அப்போது, கோடைகாலம் என்பதால் காவிரிநதி வறண்டு கிடந்தது. ஒவ்வொரு இடத்திலும் தன் காதை மணலில் வைத்து. எங்காவது நாம சங்கீர்த்தனம் கேட்கிறதா என்று கவனித்தபடி தேடினார். ஒரு இடத்தில் பூமியிலிருந்து ராம ராம ராம ராம என்ற திருநாமம் துல்லியமாகக் கேட்பதை உணர்ந்தார். ஆனந்தக்கண்ணீருடன் அங்கே விழுந்து வணங்கினார். தஞ்சை மன்னரின் உதவியுடன் மீண்டும் அங்கொரு அதிஷ்டானம் கட்டினார். அந்த இடமே கோவிந்தபுரம் போதேந்திர சுவாமிகள் அதிஷ்டானமாகத் தற்போது விளங்குகிறது. தஞ்சை மன்னர் கோவிந்தபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கு பாகவதபுரம் என பெயரிட்டு மானியம் வழங்க உத்தரவிட்டார். ஒருசமயம், சத்குரு சுவாமிகள், சீடர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு தெருவில் வந்து கொண்டிருந்தார். அழுதபடி வந்த ஒருவர் ஓடிவந்து சுவாமியிடம் மனைவி ஜானகி அம்மையாரின் மறைவு செய்தியைத் தெரிவித்தார். இதைக் கேட்டு, அவர் அதிர்ச்சி அடையாமல், தன் மனைவி ஸ்ரீராமன் திருவடியை அடைந்திருப்பாள் என்பதால், பரவசத்துடன் ராமநாமம் ஜெபித்தபடி நர்த்தனமாடினார். பின், ஒரு துறவியைப் போல தன் வாழ்வை பக்திப்பணிக்÷ அர்ப்பணித்தார். ஒருநாள் சுவாமி, பாகவதர்களுடன் நாமசங்கீர்த்தனம் செய்தபடி வந்தபோது, திண்ணையில் ஒருவன் கால்நீட்டிப் படுத்திருந்தான். இப்படி மரியாதைக் குறைவாக இருக்கிறாயே! பாகவதர்களை அவமதிப்பது பாவம். காலை மடக்கிக் கொள்! என்று பக்தர்கள் சொல்ல, நீங்களும் என்னைப் போல மனிதர்கள் தானே! என்று சொல்லி அலட்சியமாகப் பார்த்தான். அன்று முதல் கடுமையான வயிற்றுவலி அவனுக்கு உண்டானது. பின் மருதாநல்லூர் சுவாமியைத் தேடிச் சென்று தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அவரோ,நீ எனக்கு அபச்சாரம் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால், நீயோ பாகவத அபச்சாரம் செய்து விட்டாய். உன்னை மன்னிக்கும் சக்தி எனக்கில்லை! என்று மறுத்துவிட்டார். ஆனாலும், அவரின் வழிகாட்டுதல்படி, பாகவதர்களின் பாத தீர்த்தத்தை அருந்தி நோயிலிருந்து மீண்டான். மருதாநல்லூர் மடத்தில் ஒருநாள் சுவாமி தியானத்தில் இருந்தார். அந்த Œமயத்தில் சீடர் ஒருவர் அங்கு வந்தார். ”வாமிக்கு அருகில் ராமனும், சீதாபிராட்டியும் அருகில் அமர்ந்திருந்ததைக் கண்டார். கணப்பொழுதில் ராமனும், சீதையும் அவருக்குள் ஐக்கியமாயினர். இந்த விஷயத்தைக் @கள்விப்பட்ட ஒருவனுக்கு, இதே காட்சியைக் காண ஆசை உண்டாயிற்று. அன்றிரவு, மருதாநல்லூர் சுவாமி உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஜன்னல் வழியாக அவன் எட்டிப் பார்த்தான். கட்டில் மீது ராமனும் சீதையும் ஏகாந்தமாக அமர்ந்திரு தைக் கண்டான். அப்போது ஏற்பட்ட பேரொளியால் அவன் பார்வை பறி போனது. சுவாமியின் அருளால் மீண்டும் பார்வை பெற்றான். மண்ணில் பிறவி எடுத்த நோக்கத்தை நிறைவேற்றிய சுவாமி, அந்திம காலம் வந்ததை அறிந்தார். சீடர்களை அழைத்து,எனக்கு கடவுளிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் தாரகமந்திரமான ராமநாமத்தை ஜெபியுங்கள்! என்று கூறி ராமனோடு ஐக்கியமானார். அந்த நாள் சித்திரை வளர்பிறை அஷ்டமி. அப்போது அவருக்கு வயது 41. மருதாநல்லூர் சத்குரு சுவாமி காட்டிய நல்வழியில், நாமும் தினமும் ராமநாமம் ஜெபிப்போம்.

Advertisement
 
Advertisement