Advertisement

மணக்கால் நம்பி

மணக்கால் நம்பி உய்யக்கொண்டாரின் மாணாக்கர். ஆளவந்தாரின் (யமுனைத்துறைவர்) ஆசிரியர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி திருவருள் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் உய்யக்கொண்டாரால் தமது காலத்தில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அவர் திருநாடு அலங்கரிக்கும் முன்பு தம் ஆசிரியர் தமக்கு இட்ட பணியைத் தன் மாணாக்கர், மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். நம்பியும் தனக்களிக்கப்பட்டப் பணியினை நிறைவேற்றினார்.நாதமுனிகளின் சீடரான இவர், தமது குருவின் பேரனான ஆளவந்தாரை இறைவன் கைங்கர்யத்தில் ஈடுபட வைக்க பெருமுயற்சி எடுத்தார். அப்போது ஆளவந்தார் அரசனாக இருந்தபடியால் அவரை சந்திக்க முடியவில்லை.

எனினும், ஆளவந்தாரின் அந்தரங்க சமையல்காரர் மூலம் தூதுவளைக் கீரையை சில நாள் தொடர்ந்து கொடுத்து வர, அக்கீரை ஆளவந்தாருக்கு மிகவும் பிடித்துப் போனது. பின்னர் சில நாட்கள் கீரையைக் கொடுக்காமல் இருக்க, உணவில் சில நாட்களாக தூதுவளைக் கீரை இல்லாதிருக்கக் கண்டு சமையல்காரரை வினவினார். அவரும் யாரோ ஒருவர் சில நாட்கள் கொடுத்தார்; அவரை சில நாட்களாகக் காணவில்லை என்று கூற, ஆளவந்தாரும், அவர் மறுபடி வந்தால் எம்மிடம் அழைத்து வாரும் என உத்தரவிட்டார்.

இதைத் தெரிந்துகொண்ட மணக்கால் நம்பி மீண்டும் ஒருநாள் தூதுவளைக் கீரையுடன் சமையல்காரரைச் சந்திக்க, அவரும் விவரத்தைக் கூற, அவருடன் சென்று ஆளவந்தாரைக் கண்டு மகிழ்ந்தார். அவரை அடிக்கடி தனியாக சந்திக்க அனுமதி கொடுத்தால் நல்ல விஷயங்களையும், அரசு பதவியைவிட ஆனந்தம் அளிக்கும் விஷயங்களையும் தெரிவிப்பதாகக் கூற அதன்படி இருவரின் சந்திப்புகள் நிகழ்ந்தன.

அந்த சந்திப்புகளில் ஆளவந்தாருக்கு ஆழ்வார்களின் பிரபந்தங்களை உபதேசித்து திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்று அரங்கனை தரிசனம் செய்து வைத்து, அவரிடம் நம்மாழ்வார் மூலம் கிடைத்த ராமானுஜர் திருமேனியைத் தந்தார். ஆளவந்தாரும் மனம் மாறி, அரங்கனுக்கு அடிமையாகி, வைணவ ஆசார்யராக விளங்கி, திருமால் நெறியை பரப்பியதோடல்லாமல் தமக்குப் பிறகு வைணவம் வளர பகவத் ராமானுஜரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

உய்யக்கொண்டாருக்கு சீடர்கள் ஐந்து பேர் உண்டு; அவர்களுள் ஒருவரே மணக்கால் நம்பி உய்யக்கொண்டாரது சிறந்த சீடராக விளங்கிய மணக்கால் நம்பிக்கு, ராமமிச்ரர் என்ற பெயரும் உண்டு. உய்யக்கொண்டார் அவதரித்து 43 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 929--ல் லால்குடி அருகே இப்பொழுது மணக்கால் என்று கூறப்படும் கிராமத்தில் அந்தணர் குலத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் அவதரித்தார், மணக்கால் நம்பி.

இவரது இயற்பெயர் ராமன் என்பதாகும். ஒரு நாள் உய்யக்கொண்டாரது மகள்கள் இருவரையும் நீராட்டி அழைத்து வந்தார். வரும் வழியில் வாய்க்கால் சேறாயிருப்பதைக் கண்டார். அவர்கள் திகைத்து நிற்க, தாம் படியாய்க் கிடந்து அவர்களைத் தன் முதுகிலே கால் வைத்து தாண்டுமாறு செய்தார். உய்யக்கொண்டார் தம் புதல்விகளின் கால் சுவடுகள் (மணற்கால்) அவர் முதுகில் பதிந்து இருப்பதைப் பார்த்தார். அன்று முதல் அவரை மணற்கால நம்பி என்று பெயர் சூட்டி அழைத்தனர். அதுவே பேச்சு வழக்கில மணக்கால் நம்பியானது.

இவரது சீடர்கள் ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார், திருவரங்கப் பெருமாளரையர், தெய்வயத்துக்கரசு, நம்பி, பிள்ளையரசு நம்பி, சிறு புள்ளூடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலை தாசர், வங்கிபுரத்தாச்சி முதலியோராவர். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரையும் எம்பெருமானார் சீடர்வடுகநம்பியையும் ஆச்சார்ய பக்திக்கு உதாரணமாக எடுத்துச் சொல்வர்.

Advertisement
 
Advertisement