Advertisement

ஆலங்குடியில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை: பரிகார ராசியினருக்கு அழைப்பு!

திருவாரூர்: ஆலங்குடியில், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையில், பரிகார ராசியினர், பங்கேற்கலாம் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குரு பெயர்ச்சி விழா, நடந்து வருகிறது. இங்கு, இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை விழா, நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, கடந்த, 16ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை நடந்தது. நேற்று முன் தினம், குரு பெயர்ச்சியையொட்டி, இரண்டாம் கட்டமாக, குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை, இன்று, 30ம் தேதி முதல், வரும், 6 ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து, கோவில் உதவி ஆணையர், சிவராம்குமார் கூறியதாவது: குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்புவோர், 400 ரூபாய் மணியார்டர் அல்லது, டிடியாக உதவி ஆணையர், செயல் அலுவலர், ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவில், ஆலங்குடி - 612 801, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது, ஆலங்குடி சிட்டி யூனியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 068001000293822 க்கு பணம் செலுத்தி, விவரங்களை அனுப்பினால், குரு பகவான் உருவம் பொறித்த, வெள்ளி டாலர் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, சிவராம்குமார் தெரிவித்தார். ஸ்தல அர்ச்சகர், ஜோதி சிவராமலிங்க சிவாச்சாரியர் கூறியதாவது: குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு, 28ம் தேதி இரவு, 9:10 மணியில் இருந்து, 10:00 மணிக்கு பிரவேசித்தார். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ராசியினர், கட்டாயம் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஆலங்குடி, குரு பகவான் கோயிலில், இன்று முதல், 6 ம் தேதி வரை, காலை, 9:00 மணியில் இருந்து 12:00 மணி வரையிலும், மாலை, 4:30 மணியில் முதல் இரவு, 8:00 மணி வரையிலும், குரு லட்சார்ச்சனை விழா நடக்கிறது. இதில், பரிகார ராசியினர் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement