Advertisement

ராமாயணம் பகுதி - 25

லட்சுமணன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ராமரா இப்படி சொல்கிறார் என மனதுக்குள் நினைத்தார். லட்சுமணா! காட்டில் இன்று தான் இரவு நேரத்தில் முதன் முதலாக தங்குகிறோம். இந் நேரத்தில் நான் ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்கிறேன். நம் தந்தை அயோத்தியில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார். கைகேயி மிகுந்த ஆனந்தமாக இருப்பாள். பரதனுக்கு நிரந்தரமாக ஆட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக நம் தந்தையை அவள் கொல்ல முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் காம இச்சையில் நாட்டமிக்கவர். அப்படி இருப்பதைப்பார்த்தால் இந்த உலகத்திலேயே உயர்ந்தது காமம் தான் என எண்ணுகிறேன். நம்முடைய தந்தை காமத்தின் வசப்பட்டு, கைகேயியின் அழகில் மயங்கி நம்மை காட்டுக்கு துரத்தி இருக்கிறார் என்றால், இதிலிருந்தே காமத்தின் மகிமையைப்புரிந்து கொள். கைகேயிக்கு கர்வம் அதிகம். இப்போது நாடும் அவள் வசம். எனவே அவள் எனது அன்னை கவுசல்யாவை மிகவும் கொடுமைப்படுத்துவாள். அதே நேரம் உனது அன்னை சுமித்ராவை கஷ்டப்படுத்த மாட்டாள். அவளால் கைகேயிக்கு எந்தப்பிரச்னையும் கிடையாது. எனவே நீ உடனே புறப்பட்டு அயோத்திக்கு போ. கவுசல்யாவுக்கு ஆறுதலாக இரு, என்றார். லட்சுமணனுக்கு கண்ணீரே வந்து விட்டது. அண்ணா! நீங்கள் இப்படி சொல் வது துயரத்தை தருகிறது. மேலும் நான் இங்கிருந்து போய் விட்டால், சீதா தேவிக்கு பாதுகாப்பு இல் லாமல் போய்விடும். நீங் கள் என்னோடு இல் லாவிட்டால், எந்த பயனுமே என் வாழ்க் கையில் இல்லை. சொர்க் கத்திற்கு வா என என்னை அழைத்தாலும் கூட, ராமன் இல்லாத அந்த சொர்க்கம் எனக்கு தேவையில்லை என்றே சொல்வேன், என்றான். ராமனுக்கு மகிழ்ச்சி அதிகமானது. எல்லாத்துன்பமும் பறந்தோடி விட் டது போன்ற உணர்வு ஏற்பட்டது. தம்பியை அப்படியே அணைத்து கொண்டார். காட்டில் இருக்கும் பதினான்கு ஆண்டுகளும் தன்னுடனேயே இருப்பதற்கு உறுதியளித்தார். இந்நேரத்தில் இருள் சூழ்ந்தது. ஒரு ஆலமரத்தடியில் தர்ப்பை புற்களை பரப்பி, அதில் ராமனும் சீதையும் படுத்தனர். கண்ணுறங்காமல் வில்லேந்தி லட்சுமணன் பாதுகாத்தான். மறுநாள் காலையில் கங்கையும் யமுனையும் சேரும் இடமான பிரயாகைக்கு அவர்கள் புறப்பட்டனர். அவ்விடத்தில் பரத்வாஜரின் ஆசிரமம் இருந்தது. அவர் மகா ரிஷி. ராமன் காட்டிற்கு வந்ததில் மிகப்பெரிய உள்ளர்த்தம் இருக்கிறது. அவர் கிருஷ்ணனின் அவதாரம். மனம் வைத்தால் தன் நகத்தாலேயே ராவணனின் தலையை கீறியிருக்க முடியும். ஆனாலும் அதை செய்யவில்லை. மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென் பதே ராமனின் லட் சியமாக இருந்தது. வசிஷ்டர் அவரது குல குருவாக இருந்தார். விசுவாமித்திரர் அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இப்போது பரத்வாஜரை சந்திக்கிறார். ஒரு கால கட்டத் தில் சபரி அன்னையை தரிசிக்கிறார். தன் மீது பக்தி வைத்தவர்களை பார்ப்பதற்காக பகவான் மானிட வடிவெடுத்து ராமன் என்ற பெயரில் வந்துள்ளார். அவர் மீது யார் உண்மையான பக்தி வைத்தாலும் ஏதோ ஒரு உருவத்தில் பார்க்க வரத்தான் செய்வார். உதாரணமாக, ஒருவர் பணக்கஷ்டத்தில் இருந்தால், யார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுகிறாரோ அவர் ராமனுக்கு சமமானவர். மனித வடிவில் தெய்வங்கள் வருகின்றன என்பதை உணர்த்திக்காட்ட ராமாவதாரம் உருவானது.பரத்வாஜர் ராமனை ஆசீர்வதித்தார். அங்கிருந்த கிழங்கு மற்றும் பழவகைகளை அவர்களுக்கு கொடுத்தார். மிகவும் சந்தோஷத்துடன்,ராமா! உன்னை தரிசிப்பதற்காக நான் பல ஆண்டுகளாக காத்திருந்தேன். உன் நினைவு எப்போதும் என் மனதில் இருந்தது. ஆனால் எதற்கும் காலம் கனிய வேண்டும். அருகிலேயே புண்ணியதலம் இருந்தாலும், அதை பார்ப்பதற்கு சிலருக்கு கொடுத்து வைப்பதில்லை. அதே நிலையில் தான் நான் உள்ளேன். ஆனால் நீயே என்னை தேடி வந்து விட்டாய். நீ இங்கேயே தங்கி இருக்கலாம். எந்த கஷ்டமும் உனக்கு நேராது, என்று உள்ளம் உருகி சொன்னார். அதற்கு ராமன்,மகரிஷியே, இந்த இடம் அயோத்திக்கு மிக சமீபமாக இருக்கிறது. நான் இங்கிருந்தால் அயோத்தி மக்கள் என்னை பார்க்க வந்து கொண்டிருப்பார்கள். எனவே வெகு தொலைவுக்கு நான் சென்று விடுவது தான் நல்லது, என்றார். ராமனின் உள்ளத்தூய்மையை கண்டு வியந்த பரத்வாஜர்,அப்படியானால் ராமா! நீ இங்கிருந்து பத்து குரோசம் (32 கி.மீ.) தொலைவில் உள்ள சித்திரக்கூடம் என்ற மலைக்கு செல். அங்கே பல ரிஷிகள் வசிக்கிறார்கள். கரடிகள் அதிகம். அந்த மலைச்சிகரத்தை பார்த்தாலே பாவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றாது. அங்கு ஒரு விசேஷம் உண்டு. அவ்விடத்தில் தவம் செய்தால், நமது உடலுடனேயே சொர்க்கத்திற்கு சென்று விடலாம், என்றார்.அவர் சொன்னது போலவே காளிந்தீ நதியைக்கடந்து சித்ரக்கூடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். லட்சுமணன் அங்கு கிடைத்த மரங்களை கொண்டு வள்ளம் தயாரித்திருந்தான். அதில் ஏறி நதியைக்கடக்கும் போது சீதா தேவி,காளிந்தீ தாயே! எங்களை நீ தான் பாதுகாக்க வேண்டும். என் கணவரின் வன வாழ்க்கை முடியும் வரை அவரை நல்லபடியாக வைத்து கொள். நாங்கள் அயோத்திக்கு நல்ல முறையில் திரும்பி போனால், பல்லாயிரம் பசுக்களை உனக்கு தானமாய் தருகிறேன். கள் குடங்களால் உனக்கு பூஜை செய்கிறேன், என்றாள்.நதியைக்கடந்ததும் கரையில் இறங்கி சற்று தூரம் அவர்கள் நடந்தனர். இந்தக்காலத்தில் அரசமரத்தை சுற்றுவது போல, அந்தக்காலத்தில் ஆலமரத்தை சுற்றும் வழக்கம் இருந்தது. ஆலமரத்திற்குசியாமம் என்ற பெயர் உண்டு. சீதாதேவி அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள். மகா விருட்சமே! உன்னை வணங்குகிறேன். என் கணவரின் வன யாத்திரை விரைவாகவும், நல்ல முறையிலும் நிறைவேற வேண்டும். நான் மறுபடியும் கவுசல்யா தேவியையும், சுமித்ராவையும் பார்க்க வேண்டும். அதற்கு நீ அருள் செய்ய வேண்டும், என்றபடியே எழுந்து அந்த மரத்தை சுற்றி வந்தாள். தனக்காக பிரார்த்தனை செய்யும் மனைவியைப் பார்த்து ராமன் மிகவும் பெருமை கொண்டான். சீதா தேவி நுண்ணறிவு படைத்தவள். எதைப்பார்த்தாலும் அதைப்பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுவாள். காட்டில் நடந்து செல்லும் போது ஒவ்வொரு பூவாக பார்த்து, இது என்ன பூ, இதன் குணம் என்ன? இந்த மரத்தின் குணம் என்ன? இது என்ன மரம்? இது என்ன செடி என்றெல்லாம் கேட்டுக்கொண்டே சென்றாள். ராமன் அவளுக்கு அவற்றின் தன்மையைப்பற்றி எடுத்துரைத்தார்.நாம் சுற்றுலா சென்றால் ஏதோ வேடிக்கை பார்ப்பதோடு வந்து விடாமல் சீதா தேவியைப்போல அவ்விடத்தின் தன்மை முழுவதையும் அறிந்து வர வேண்டும். ராமாயணம் ஏதோ ஒரு வேடிக்கை கதை அல்ல. அதன் ஒவ்வொரு வரியும் வாழ்க்கை தத்துவத்தை, வாழும் முறையை நமக்கு கற்று தந்து கொண்டேஇருக்கிறது.சித்ரக்கூடத்தில் பர்ண சாலை ஒன்றை அமைத்து, அங்கேயே தங்க வேண்டுமென ராமன் விரும்பினார்.

Advertisement
 
Advertisement