Advertisement

விநாயகர் புராணம் பகுதி-26

விரோசனா! வன்னி இலையின் முக்கியத்துவத்தைக் கேள்.அருகம்புல்லை மாலையாகவும், வன்னியை எனக்கு அர்ச்சனை செய்வதற்காகவும் நீ பயன்படுத்தலாம். ஒரு காலத்தில், விதர்ப்ப தேசத்தை புண்ணிய கீர்த்தி என்பவன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை இல்லை. எனவே, அவனது காலத்துக்குப் பின் மந்திரிகள் ஒன்று கூடி, மன்னனின் உறவுக்காரனான சாம்பன் என்பவனை அரசனாக்கினர். ஆனால், அவன் எதிர்பார்த்ததைப் போல் நல்லாட்சி தராமல் கொடுமைகள் பலவற்றை அரங்கேற்றினான். பெண் பித்தனான அவன், பிறர் மனைவியரைக் கூட விட்டு வைக்கவில்லை. இவனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம், தனக்கு பதவியளித்த மந்திரிகளையே நீக்கி விட்டு, துர்மதி என்பவனை மந்திரியாக்கிக் கொண்டான். அவன் அரசனுக்கு எல்லா வகைகளிலும் உதவியதுடன், தானும் அவனைப் போலவே லீலைகளில் ஈடுபட்டான். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க பாவங்களையே சேர்த்துக் கொண்டிருக்க, ஒருமுறை காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார்கள். வரும் வழியில், எனது கோயில் ஒன்றைக் கண்டனர். அங்கு பக்தர்கள் ஒன்றுகூடி பூஜை செய்து கொண்டிருந்தனர். அங்கே வந்த ஒரு பக்தையிடமிருந்த மாங்கனிகளைப் பிடுங்கி, என் முன்னால் வைத்து, பிள்ளையாரே! இவங்க கொடுக்கறதையெல்லாம் நீ ஏத்துக்கிறே இல்லே! இதோ! நாங்க கொடுக்கிற இந்த கனிகளையும் ஏத்துக்கோ! என விளையாட்டாகச் சொன்னார்கள். பின்னர் அங்கிருந்து போய்விட்டார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகும், அவர்கள் கொடிய பல பாவங்களைச் செய்து இறந்தும் போனார்கள். எமதூதர்கள் அவர்களைக் கொடிய சாட்டைகளால் அடித்து இழுத்துச் சென்றனர். இங்கே, அனுபவித்த இன்பத்திற்கு பல மடங்கு ஈடான துன்பத்தை அவர்கள் அனுபவித்தனர். நரக <உலகத்தில் வாட்டி வதைபட்ட அவர்கள் பூச்சி, புழு, கரப்பான், நண்டு என பல இழிபிறவிகளை எடுத்தனர். மீண்டும் ஒரு பிறவியில் சாம்பன் மானிடனாகவும், துர்மதி அசுரனாகவும் பிறந்தனர். மானிடனாகப் பிறந்த சாம்பனுக்கு அப்பிறவியில் வீமன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. வீமன் அப்பிறவியிலும் திருடனாகவே இருந்தான். ஒரு முறை, பல பிராமணர்கள் யாகம் முடித்து விட்டு, அதற்குரிய தட்சணையாக தங்கம், பசுக்கள் முதலானவற்றை பெற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கொள்ளையனான வீமன், அவர்களை வழிமறித்தான். தங்கத்தையும், பசுக்களையும் தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினான். அந்தணர்கள் அவனுக்கு நற்புத்தி சொல்லவே, ஆத்திரமடைந்த அவன், அவர்களைக் கொலை செய்து அத்தனைப் பொருளையும் அபகரித்துக் கொண்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. செய்த பாவத்திற்கு பலன் கிடைக்க வேண்டாமா? சாம்பனின் மந்திரியாக இருந்த துர்மதி, அந்தப் பிறவியில் ராட்சதனாகப் பிறந்திருந்தான். அவன், பசுக்களையும், பெரும் செல்வத்தையும் திருடிக் கொண்டு வந்த வீமன் முன்னால் வந்து நின்றான். பசுக்களைப் பிடித்துத் தின்றான். வீமனையும் விழுங்க எண்ணம் கொண்டு அவனைப் பிடிக்க கையை நீட்டவும், வீமன் அலறியடித்து ஓடினான். அசுரனும் விடவில்லை. வீமன் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறினான். அப்போது அதில் இருந்த இலைகள் உதிர்ந்தன. அந்த மரத்தின் கீழே யாரோ சிலர் எனது சிலையை பிரதிஷ்டை செய்திருந்தனர். அந்த சிலையின் மீது அந்த இலைகள் உதிர்ந்தன. அசுரன் மரத்தருகே வந்து, வீமனைக் கீழே விழச் செய்வதற்காக மரத்தை உலுக்கினான். அப்போதும், என் சிலை மீது இலைகள் உதிர்ந்தன. ஒரு வழியாக அசுரன் வீமனைப் பிடிக்க, வீமன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கி சண்டை போட்டான். ஒரு கட்டத்தில் அசுரனை ஒரு பாதாளத்தருகே சமயோசிதமாக வரச்செய்த வீமன், அவனை உள்ளே விழும்படிச் செய்து விட்டான். அவன் உள்ளே விழுந்ததும், மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பிய அவன் நின்ற பாறையில் திடீரென கால் வழுக்கவே, அவனும் அதே பாதாளத்தில் விழுந்து இறந்தான். இவர்கள் இருவரும் மீண்டும் எமலோகம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு மீண்டும் கொடிய தண்டனை கிடைத்தது. இருப்பினும், அந்தப்பிறவியில் இவர்கள் தங்களை அறியாமலே என்னை வன்னி இலை கொண்டு அர்ச்சித்த பலன் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்ததும், புண்ணியத்தை அனுபவிக்கும் பாக்கியகாலம் வரவே, அவர்கள் தங்க விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு எனது லோகத்தை வந்தடைந்தனர். பாவிகளுக்கும் கூட மங்களத்தை அருளும் சக்தி வன்னி இலைக்கு உண்டு, என்றார். விரோசனை இந்த சம்பவம் கேட்டு உளம் மகிழ்ந்து, அங்கு நின்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து கணவருடன் ஆனந்தலோகம் அடைந்தாள். விநாயகப்பெருமானை சதுர்த்தி நாளில் அவதரித்ததாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். இந்நாளில் சந்திர தரிசனம் கூடாது. இது ஏன் தெரியுமா? யாராவது ஒருவர் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டால், அவரை ஏளனம் செய்யக்கூடாது என்பது நியதி. பிரம்மதேவன் இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டார். நாரதர் மூவுலகும் சஞ்சரிப்பவர். தினமும் சிவலோகம் வந்து ஒரு மாங்கனியை காணிக்கையாக வைத்து இசை பாடி சிவசக்தியைப் பரவசப்படுத்துவார். ஒருநாள், காணிக்கையாக கொடுத்த மாங்கனியை யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் கேட்டார். வழக்கமாக அப்பழம், விநாயகருக்கே கிடைக்கும். இப்போது முருகனுக்கு அப்பழத்தைக் கொடுக்கலாமே என பிரம்மா கூற, கணபதிக்கு கோபம் வந்து விட்டது. அவரது கோபத்துக்கு ஆளானால், பெரும் தண்டனைக்கு ஆளோவேமே என நடுங்கிய பிரம்மா அவரருகே சென்றார். கணேசரும் அவரை மன்னிக்க முடிவு செய்த வேளையில், பிரம்மாவின் நடுக்கத்தைப் பார்த்து சந்திரன் சிரித்தான். விநாயகரின் கோபம் சந்திரன் மீது திரும்பி விட்டது. ஒருவன் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவனைக் காப்பாற்ற முயல வேண்டுமே தவிர, அவனது வேதனையை எண்ணி சந்தோஷப்படக்கூடாது, என சந்திரனைக் கடிந்து கொண்டதுடன், இப்படிப்பட்ட உனக்கு உலகுக்கு ஒளி கொடுக்க தகுதியில்லை, என சபித்து விட்டார். சந்திரன் ஒளியிழந்ததால் தேவர்களுக்கு அமுத கிரணம் கிடைக்கவில்லை. அவர்கள் வாடி வதங்கினர். சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் சந்திரனுக்கு சாபவிமோசனம் தந்து ஒருநாள் தவிர மற்ற நாட்கள் சந்திரன் வளர்ந்து தேய்ந்து கிரணங்களைப் பொழிவான், என்றார். அதனால் தான் அமாவாசையன்று தேவர்கள் உபவாசம் இருப்பது போல, நாமும் உபவாசம் இருப்பது நல்லது. கணபதியின் பேரருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

Advertisement
 
Advertisement