சென்னை ஆடி திருவிழாவில் தீயோடு விளையாட்டு!
சென்னை: எருக்கஞ்சேரி திருவீதியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நடந்த, ஆடி திருவிழாவில், அந்த பகுதி இளைஞர்கள், தீப்பந்தங்களை சுழற்றி வித்தை காட்டினர். ஆடி மாதம் முடிந்தாலும், சென்னையில் உள்ள பெரும்பாலான கோவில்களில், இன்னும், ஆடி திருவிழா முடியவில்லை. ஐந்தாம் வாரத்தை கடந்து, பத்தாம் வாரம் வரை திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள, திருவீதியம்மன் கோவிலின், 83ம் ஆண்டு ஆடி திருவிழா, தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையுடன், கிராம திருவிழா போல், குழந்தைகளுக்கான ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும், வாணவேடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, இசை கச்சேரியுடன், பகுதி இளைஞர்களின் தீப்பந்தாட்டமும் நடைபெற்றது. தீப்பந்தங்களை சகட்டு மேனிக்கு சுழற்றி ஆடினர். தீப்பந்த விளையாட்டால், விபத்து நிகழாமல் இருக்க, போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.