Advertisement

மணக்குள விநாயகர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்!

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், ஜனாதிபதி சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தார். ராஜ்நிவாசில் தங்கிய அவர், நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார். மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி உடன் சென்றனர். கலெக்டர் தீபக்குமார் தலைமையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழுவினர் ஜனாதிபதியை வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். ஜனாதிபதி பெயருக்கு, சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. ஜனாதிபதி வருகையையொட்டி மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. சாமி தரிசனத்திற்குப் பிறகு, கார் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார். காலை 10.16 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். விமான நிலையத்தில் நடந்த வழியனுப்பு விழாவில், கவர்னர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement