Advertisement

லவகுசா பகுதி-21

ஏ பூமாதேவியே! உன் மேலுள்ள கடல் எனது ஒரு அதட்டலுக்கு கட்டுப்படும் தன்மையுடையது. சீதையை மீட்க நான் இலங்கை சென்ற போது, அந்தக் கடல் வழிமறித்தது. நான் வில்லையும், அம்பையும் எடுத்தவுடனேயே பணிந்து வழிவிட்டது. அந்தச் சிறுமைக்குரிய கடலுக்குள் என் மனைவியை ஒளித்து வைத்திருக்கிறாயா? உன்னை ஒரே மிதியில், பாதாள லோகத்துக்குள் அழுத்தி விடுவேன், என்று காலை தூக்கினார். ஏதோ நினைவு வந்தவராக, ஏ பூமாதேவி, தப்பி விட்டாய். உன்னுள்ளே என் சீதாவை ஒளித்து வைத்திருக்கிறாய். நான் உன்னை அழுத்தினால், அந்த அழுத்தலில் அவளுக்கும் வலியெடுக்கும். அதனால், உன்னை மிதிக்க முடியாதவனாக இருக்கிறேன், எனச் சொல்லி காலை கீழிறக்கி, ஏ பூமாதேவியே! உன்னை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன். என் மனைவியை மீட்கப் போகிறேன், என்று வில்லை எடுத்த வேளையில், நான்முகக் கடவுளான பிரம்மா, தன் தாமரை மலர் இருக்கையில் அங்கே எழுந்தருளினார். ஸ்ரீராமபிரானை வணங்கினார். ஐயனே! வணக்கம். ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்களாலான இந்த உலகம் என்கிற பானகத்தை விரும்பி அருந்திவிட்டு, ஆலிலைத் தளிரில் துயில் கொண்டவனே! மூவுலகையும் உன் திருவடியில் இருந்து படைத்தவனே! உயர்ந்தவனே! ஒப்பற்றவனே! ஐயனே! சாந்தம் கொள். உன்னிடம் சில விபரங்களைச் சொல்லவே நான் இங்கு வந்தேன். மானிடப்பிறவிகளில் நீ உயர்ந்தவன். உன் உருவம் இங்கு மட்டுமல்ல, வானத்தைப் பிளந்து கொண்டு அவ்வுலகத்திலும் ஆக்கிரமித்துள்ளது. (வானவரும் வணங்கும் மனிதன் ராமன் என குறிப்பிடுகிறார்). இந்த உலகமே உன்னுடையது. இந்த உலகம் உன் வயிற்றுக்குள் அடங்கியுள்ளது. நீ ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் என்பதை மறந்து விட்டாயா? நிலையில்லாத உடலுடன் கூடிய பல உயிர்கள் உன் வயிற்றில் பிறந்து அங்கேயே இறக்கின்றன. உயிர்களைப் படைப்பது உன் வயிற்றிலுள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் என் பணி என்பதை நான் ஏற்க மாட்டேன். அது உன் சக்தியைக் கொண்டு என்னால் நிகழ்த்தப்படுகிறது. எனவே படைப்பின் காரணகர்த்தா நீ தானே ஒழிய நானில்லை, என்றவர் மேலும் தொடர்ந்தார். ஸ்ரீராமா! நினைவுக்கு வருகிறதா! புலத்தியன் என்ற முனிவனின் மகனான விச்சிரவசு என்பவன் பத்து தலைகளையுடைய ராவணன் என்ற அரக்க பிள்ளையைப் பெற்றான். அவன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் நாராயணனாகிய உன்னை வேண்ட, அவனை அழிப்பதற்காக நீ பூலோகத்தில் மானிடனாய் பிறந்தாய். அவனை அழித்தும் விட்டாய். பூலோகத்திற்கு நீ வந்த பணி முடிந்து விட்டது. நாராயணா! நீ காலை உயர்த்தி மிதிக்க முயன்றாயே பூமி மாதா. இவள் யாரென்பது உனக்கு நினைவில்லையா? இவளும் உன்னால் படைக்கப்பட்டவள் தான். உன்னால், உருவாக்கப்பட்டவளை நீயே அழிக்க முயல்கிறாயே! நீ காக்கும் கடவுள் என்பதை நினைவில் கொள். உன்னால், உருவாக்கப்பட்ட இந்த பூமிக்குள், உனக்கு கட்டுப்பட்ட இந்த பூமிக்குள் தான் உன் காதலி சீதா தோன்றினாள். வந்த இடத்திற்கே சென்று விட்டாள். மானிடராக பூமியில் பிறப்பவர்கள் மண்ணிற்குள் செல்ல வேண்டும் என்பதும் நீ வகுத்த நியதி தானே! அதுவே அவளுக்கும் நிகழ்ந்தது. மண்ணில் ஒருமுறை மறைந்தவர்களை மீண்டும் மீட்க முடியாது என்பது உன்னால் இடப்பட்ட சட்டம். இனி அவளை நீ வைகுண்டத்தில் மட்டுமே பார்க்க முடியும். வில்லேந்திய ராமா! பூமியில் மானிடராய் பிறந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமும் பற்றும் வைப்பது இயற்கையே. தாய் மகன் மீதும், கணவன் மனைவி மீதும் வைக்கும் பற்றே இவ்வாறு கோபத்தை உண்டாக்குகிறது. பூமியில் பிறப்பவர்களை யார் மீதும் பற்று வைக்காதே, பாசம் வைக்காதே என்று தானே அறநூல்களும், மகான்களும் சொல்கிறார்கள். பற்றும் பாசமுமே கோபத்தை உண்டாக்குகின்றன. தன்னோடு நெருங்கி இருந்தவன் மறைந்து போனால், கடவுளே! இது உனக்கு அடுக்குமா என கேட்பது, உலக வாழ்க்கை நிலையானது என்று நினைக்கும் அஞ்ஞானவாதிகளுக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், நீயே இறைவன், நீ மானிடனாய் பிறப்பெடுத்திருக்கிறாய். அவ்வளவே. உனக்கேது பற்றும், பாசமும். லட்சுமிபிராட்டியே சீதையாக இவ்வுலகில் பிறந்தாள். உனக்கு முன்னதாக வைகுண்டத்தை அடைந்து விட்டாள். அங்கு போய் அவளைச் சேர்ந்து கொள், என நினைவூட்டினார். ஐயனே! பூலோக வாழ்வு நிலையற்றது. வைகுண்டமே நிலையானது. அங்கு நன்மை மட்டுமே நிகழும். பூமியில் உன் பணி முடிந்தது. நீயும், மீண்டும் அங்கே எழுந்தருள வேண்டும், என்றார். பிரம்மனின் இந்த வார்த்தைகள் ராமனுக்கு முந்தைய நிலையை உணர்த்தின. அவர் கோபம் தணிந்தார். இந்நேரத்தில் லவகுசர் அங்கே வந்தனர். அவர்களுக்கு எல்லா உண்மையையும் வால்மீகி முனிவர் உணர்த்தியிருந்தார். தாங்கள் ஸ்ரீமன் ராமனின் பிள்ளைகள் என்பதை அறிந்த அவர்கள் பெருமை கொண்டனர். அதே நேரம், தாயின் இழப்பை அவர்களால் தாங்க முடியவில்லை. அழுதபடியே, தந்தையின் மார்பில் அடைக்கலமாயினர். ராமபிரான் அவர்களுக்கு புத்திமதி சொன்னார். என் அன்புச் செல்வங்களே! நாம் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். நான் தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தேன். சக்கரவர்த்தி திருமகன் என்ற பணக்கார அந்தஸ்து எனக்கு திருமணம் வரையே நிலைத்தது. திருமணத்திற்கு பிறகு, நான் காட்டிற்குச் சென்று விட்டேன். ஆடம்பர உடைகளும், அறுசுவை உணவும் உண்ட எனக்கு அங்கே கிடைத்தது மரப்பட்டைகளால் ஆன உடையும், கனி கிழங்கு வகைகளுமே! செலவம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், மனிதனுக்கு அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது முன்வினைப்பயனால் மட்டுமே நிகழும். ஒரு காலத்தில், என் தந்தை வேட்டைக்குச் சென்றார். அப்போது...

Advertisement
 
Advertisement