ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதைமுன்னிட்டு வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சிறப்பு பூஜைகள், சங்காபிஷேகம், மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.
சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன், அல்லிகண்மாய் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் இரண்டாமாண்டு திருப்புகழ் சஷ்டி வழிபாட்டு குழுவினர் சார்பில் துர்காதேவிக்கு அபிராமி அந்தாதி, சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை அபிராமி அந்தாதி நூறு பாடல்கள் பாடப்பட்டன. இதன்பின் துர்க்கை அம்மனுக்கு பாமாலை சூடல், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மஞ்சங்குளம்: பரமக்குடி அருகே மஞ்சங்குளம் மகா விஷ்ணு, மங்களவிநாயகர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. மேலும், 49வது ஆண்டு திருவிளக்கு, மண்டலாபிஷேகம் நடந்தது.