Advertisement

திருமலையில் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் தரிசனம்!

வேங்கடவனுக்கு நித்தமும், பல ஸேவைகள் நடைபெறும் என்றாலும், முதலாவதாக இடம் பெறுவது ஸ்ரீசுப்ரபாதம் ஸேவைதான். அதிகாலையில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், கோயில் சேவகர்கள், வீணை இசைக்கலைஞர்கள் ஆகியார் தங்கவாசலை அடைவார்கள். அங்கே துவாரபாலகரை வணங்கி, ஸ்வாமியை மனத்தில் தியானித்தவண்ணம் திருக்கதவை திறப்பார் அர்ச்சகர் அனைவரும் நுழைந்ததும் கதவு சாத்த்பபடும்.

பிறகு திருச்சன்னதியில் தீபங்கள் ஏற்றப்பட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க... முதல் நாள் இரவு தொட்டிலில் கிடத்திய போக ஸ்ரீநிவாஸ மூர்த்தியை திருப்பள்ளி எழுந்தருளச் செய்வார்கள். பின்பு அவரை மூலவருக்கு அருகில் , எப்போதும் அவர் இருக்கும் இடத்தில் எழுந்தருளச் செய்வார்கள். ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் முடியும் தருணத்தில் சன்னதியின் திருக் கதவுகள் மீண்டும் திறக்க, ஸ்வாமிக்கு பாலும் வெண்ணெயும் சமர்பணபித்து தீபாராதனை நிகழும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர். இந்த தரிசனத்தையே சுப்ரபாத தரிசனம், விஸ்வரூப தரிசனம் என்பார்கள். அதிகாலைப் பொழுதில் தீப ஒளியில் சுடர்ஜோதியாய் அருளும் திருவேங்கடவனை திருமகள் நாயகனைக் காண கண்கோடி வேண்டும்.

பகவானின் அர்ச்சாவதார நிலையில் (உருவ வழிபாடு, தற்போது நாம் திருக்கோயில்களில் வழிபடும் தெய்விகத் திருவுருவங்கள்) முதன்முதலாக திருமாலுக்கு சுப்ரபாதம் பாடிய பாக்கியமும் பெருமையும் பெற்றவர் யார் தெரியுமா?

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யார் என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த மகானால் அருளப்பட்டது.ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் , பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 92 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே. அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், ஸ்ரீபி.வி. அனந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி கற்றுத்தரப்பட்டது.

பிரதிவாதி பயங்கரம் உ.வே. அண்ணங்கராச்சார்ய சுவாமிகள் தமது வாழ்நாளில் எழுதி பதிப்பித்த நூல்கள் 1240-க்கும் அதிகம்! இவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் புலமை மிக்கவர், திவ்ய பிரபந்த திவ்யார்த்த தீபிகை என்ற தலைப்பில் ஆழ்வார் பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஜனாதிபதி விருது பெற்றவர் இவர்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், இவரின் உரையை ரசித்து கேட்பாராம், நான் பிறப்பால் உ.வே. (உத்தமதானபுரம் வேங்கடராமையரர்); நீர் அறிவால் உ.வே. (உபய வேதாந்தி), என்று மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

உ.வே. அண்ணங்கராசார்ய சுவாமிகள் ராமானுஜர் என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். இவரிடம் இருந்து ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பாடும் முறையைக் கற்றுக்கொண்ட அனந்தசயனம் ஐயங்கார்தனது வாழ்நாள் முழுவதும் திருமலை சன்னிதானத்தில் சுப்ரபாத ஸேவையில், அந்தத் தெய்விகப்பாடலை பாடி சேவை செய்திருக்கிறார்.
முதன் முதலில் இசைத்தட்டு வடிவில் சுப்ரபாதத்தைப்பதிவு செய்து வெளியிட்டவரும் அனந்தசயனம் ஐயங்கார் தான். இவருக்குப் பிறகே திருப்பதி திருமலையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் சுப்ரபாதம் ஒலிக்கத்துவங்கியது.

பிரதிவாதி பயங்கரம்: வேதாந்த தேசிகரின் குமாரரான நயனாராச்சார்யரிடம் ஸாமந்ய சாஸ்திரங்கள் பயின்றார் அண்ணங்கராச்சார்யர் பின்னர், மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் சென்று அவர் திருவடிகளிலே ஆச்ரயித்து, அவர் திருவருளால் அத்யாத்ம சாத்திரங்கள் எல்லாம் கற்று, அவர் நியமித்தருளின் அஷ்டதிக் கஜார்யர்களிலே ஒருவரானார். நயனாராச்சார்யரிடம் சீடராக இருந்த போது அத்வைதி பண்டிதர் ஒருவரை வாதத்தில் வென்றமையால் பெரிதும் மகிழந்த நயனாராசார்யர் இவரை பிரதிவாதி பயங்கரமே என்று விளித்துக் கொண்டாடினார். அது முதல் இவரும் இவரது சந்ததியாரும் பிரதிவாதி பயங்கரம் என்றே போற்றி அழைக்கப்படுகிறார்கள்.

Advertisement
 
Advertisement