Advertisement

சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை!

சபரிமலை: சபரிமலையில் நேற்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இன்று மதியம் 12.30க்கு மண்டலபூஜை நடக்கிறது.

மண்டலபூஜைக்காக டிச.23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி நேற்று பகல் இரண்டு மணிக்கு பம்பை வந்தது. பம்பையில் பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு வரவேற்புக்கு பின்னர் கணபதி கோயில் முன்புறம் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. மாலை 3.30 மணிக்கு பேடகத்தில் அங்கி வைக்கப்பட்டு ஐயப்பா சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். மாலை 5.40க்கு சரங்குத்திக்கு வந்த அங்கியை தேவசம்போர்டு சார்பில் வரவேற்றனர். 6.15க்கு 18ம் படி வழியாக வந்த அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் வாங்கி நடை அடைத்து அங்கியை ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாரானை நடைபெற்றது. இதில் கேரள தேவசம்போர்டு தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர், ஆணையர் வேணுகோபால், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், பி.ஆர்.ஓ. முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அங்கி அணிவித்த ஐயப்பனை வணங்கினர்.

இன்று மண்டலபூஜை: இன்று பகல் 12.30க்கு மேல் ஒரு மணிக்குள் இடைப்பட்ட முகூர்த்தத்தில் மண்டலபூஜை நடைபெறுகிறது. கோயில் முன்புறம் மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜித்த களபம், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறும். பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு பத்து மணிக்கு அடைக்கப்படும். அதன் பின் பக்தர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இதைத் தொடர்ந்து மகரவிளக்கு கால பூஜைக்காக டிச., 30ம் தேதி மாலை 5.30க்கு நடை திறக்கும். அன்று வேறு விசேஷபூஜைகள் எதுவும் கிடையாது. 31ம் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் ஆரம்பிக்கும்.

Advertisement
 
Advertisement