Advertisement

ராமானுஜர் பகுதி-7

அங்கே ராமானுஜர் நின்றிருந்தார். முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, அவரை உற்று நோக்கினார். அவரை அழைத்துக் கொண்டு நல்லவர் போல் அவரது தாயிடமே சென்றார். அம்மா! ராமானுஜனை விந்திய மலைக்காட்டில் விட்டு வந்து விட்டேனே என நான் வருந்தாத நாள் கிடையாது. பொறுப்பில்லாமல் நடந்து விட்டேனோ என கவலைப்பட்டேன். இப்போது அவன் வந்தது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது, என குழைந்தார். தாயும், மகனும் அவர் சொல்வதை நம்புவது போல் நடித்துக் கொண்டார்கள். ராமானுஜா! நீ இனி நம் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கலாம், என அவர் கூறவும், தன்னைக் கொல்லத் துணிந்தவர் என்றும் பாராமல், இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளின் அடிப்படையில் ராமானுஜர் அவரது பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். ராமானுஜரின் இச்செய்கையால், அந்த ஆசிரியர் கூனிக் குறுகிப் போனார். ராமானுஜரும் அதே பள்ளிக்கு படிக்கச் சென்றார். இந்நிலையில் தான் வைணவத்தலைவர் ஆளவந்தார் காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். அவர் நூறுவயதை தாண்டிய பெரியவர். வரதராஜப் பெருமாளை சேவிக்க வேண்டுமென்பது அவரது நோக்கம். கோயிலில் சுவாமியை தரிசித்து விட்டு, வெளியே வந்தபோது, ஒரு இளைஞனின் தோள்பட்டையில் கையூன்றி, யாதவப்பிரகாசர் எதிரே வருவதைக் கண்டார்.
அந்த இளைஞர் ஒளிபொருந்தியவனாகக் காணப்பட்டார். அவரது தேஜஸ் கண்டு வியப்படைந்த அவர், ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்துக்கு அருமையான விளக்கமளித்தவர் என்பதை விசாரித்து தெரிந்து கொண்டார். அத்வைதவாதியான யாதவப்பிரகாசரிடம் இவ்விளைஞனை சிக்க வைத்து விட்டாயே, என அவர் பெருமாளிடம் சொன்னார். இருப்பினும், ராமானுஜருடன் அவர் பேசவில்லை. பெருமாள் சித்தப்படி நடக்கட்டும் என அவர் மேல் பாரத்தை போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் போய்விட்டார். இந்நிலையில் காஞ்சிமன்னன் மகளுக்கு திடீரென நோய் கண்டது. வைத்தியத்திற்கு குணமாகாத வியாதிகளை மந்திரவாதிகளை அழைத்து பார்ப்பது நம்மவர் வழக்கம். காஞ்சி மன்னனும் அதற்கு விதிவிலக்கல்ல. மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்ற யாதவப் பிரகாசரை அழைத்து வர உத்தரவிட்டான். பிரகாசர் வந்தார். அப்பெண்ணின் உடலில் பிரம்மராட்சஷன் ஒருவன் இருப்பதைக் கண்டார். ஏ பிரம்மராட்சஷே! இப்பெண்ணின் உடலில் இருந்து மரியாதையாக ஓடிவிடு, என எச்சரித்தார்.அந்தப் பேய் அவரது எச்சரிக்கையை ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர் பேயை விரட்ட பல மந்திரங்களைச் சொன்னார். எதற்கும் கட்டுப்படாத அந்தப் பேய் யாதவப்பிரகாசரிடம், நீர் என்னை விரட்ட முயன்றால் அது நடக்காது. உம் மந்திரத்தை விட நான் சக்திவாய்ந்தவன், என சவால் விடுத்தது. யாதவப்பிரகாசரின் உத்தி எதுவும் எடுபடாமல் போன வேளையில், என்ன செய்தால் நீ வெளியேறுவாய்? எனக் கேட்டார் பிரகாசர். அப்படி வாரும் வழிக்கு,என்ற அந்தப் பேய், பிரகாசரே! உமது மாணவர் ராமானுஜர் மீது நான் பக்தி கொண்டவன். அவரது உடலில் ஞானதேவியே வசிக்கிறாள். அவரது அகன்ற கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பரந்த நெற்றியுள்ள அவர், அன்று பூத்த புதுமலர் போல் காட்சி தருவார். அவர் என் முன் வந்தாலே நான் போய்விடுவேன், என்றது. உடனடியாக ராமானுஜர் அழைத்து வரப்பட்டார். அரசிளங்குமரியின் முன் அமர்ந்த அவர், பிரம்மராட்சஸே! இப்பெண்ணை விட்டு விலகிப்போ, என்றார். ராமானுஜரைக் கண்டு அகமகிழ்ந்த அந்த ராட்சஷன், ஐயனே! நான் இப்போதே விலகுகிறேன். ஆனால், தங்கள் திருவடியை என் மீது வைத்தருள வேண்டும்,என்றது. ராமானுஜர் அதன் ஆசையை நிறைவேற்றினார். ராஜகுமாரியின் தலையில் தன் திருப்பாதங்களை வைக்கவும், உங்கள் அடிமையான நான் இப்போதே விலகுகிறேன், என்றான் ராட்சஷன். நீ விலகியதற்கு என்ன சாட்சி? எனக் கேட்டார் ராமானுஜர். ஐயா! அதோ, அரண்மனைக்கு வெளியே நிற்கும் அரசமரத்தில் அமர்ந்து அதன் உச்சியிலுள்ள கிளையை ஒடித்து போடுவேன், என்றான் ராட்சஷன். அதன்படியே சற்று நேரத்தில் அரசமரக்கிளை முறிந்து விழுந்தது. அம்மட்டிலேயே இந்த இளம்பெண்ணின் முகமே பிரகாசமானது. அவள் பழையநிலையை அடைந்து, தன்னைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்துள்ளது எதற்காக என மலங்க மலங்க விழித்தாள். பின்னர், தனக்கு ஏற்பட்டிருந்த இன்னல் பற்றி கேள்வியுற்று, ராமானுஜரை நன்றிப் பெருக்குடனும், மற்றவர்களை நாணத்துடனும் பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். காஞ்சிமன்னன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமானுஜரின் பாதத்தில் வயது வித்தியாசம் பாராமல் விழுந்து நன்றி கூறினான். இந்த தகவல் நாடெங்கும் பரவவே ராமானுஜருக்கு புகழ் பெருகியது. ராமானுஜரின் பெருமையை உணர்ந்தாலும் கூட, யாதவப்பிரகாசருக்கும், அவருக்கும் கருத்து மோதல் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது. ஒருமுறை வகுப்பறையில், வேதத்தில் வரும் மந்திரம் பற்றி இருவருக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது. தன் கருத்தை மறுத்துப் பேசிய ராமானுஜரை, இனி தனது பள்ளிக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக்கூடாது என யாதவப்பிரகாசர் அனுப்பி விட்டார்.
அப்போதும் குருவின் மீது கோபம் கொள்ளாத அவர், தங்கள் சித்தம் அதுவானால் அதன்படியே நடக்கிறேன், என்ற ராமானுஜர், அதன்பிறகு பள்ளிக்கு செல்லவில்லை. இதன்பின் தனது குருவாக யாரை ஏற்பது என அவர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் பரமதயாளனான வரதராஜப் பெருமாள் அந்தப் பெரியவரை அனுப்பி வைத்தார்.

Advertisement
 
Advertisement