Advertisement

ஸத்குரு சுவாமிகள்!

தஞ்சாவூரை அடுத்த திருவிசநல்லூரில் தோன்றியவர் ஸ்ரீஸத்குரு சுவாமி. ஆன்மிக அறிஞர்; சங்கீத விற்பன்னர், கர்நாடக இசைக் கலைஞர்களால் மகான் என்று போற்றப்படுபவர். ஐயாவாள், ஸ்ரீஸத்குரு ஆகிய இரண்டு சங்கீத மேதைகளை அளித்த பெருமைமிக்க ஊர் திருவிசநல்லூர். ஸத்குருவின் பிள்ளைப் பெயர் வேங்கடராமன். பன்னிரண்டு வயதுக்குள்ளேயே வேத அத்தியாயனம் முடித்துவிட்டார். சிறு வயதிலேயே வேங்கடராமனுக்கு துருவனையும் பிரகலாதனையும் போல, பகவத் பக்தியில் மனம் ஈடுபட்டிருந்தது. திருவிசநல்லூருக்கு சிறிது மேற்கே இருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அங்கே பிரதிஷ்டை ஆகியுள்ள விக்ரகத்துக்குப் பின்னால் போய் அமர்ந்து கொண்டு ராமநாம ஜபம் செய்யத் தொடங்கி விடுவார். கோயிலுக்கு எப்போதாவது வருகிற பக்தர்களின் பார்வையில் கூட அவர் பட்டதில்லை. தந்தையாருக்கு சுற்றுப்பட்டு கிராமங்களில் நிறைய வைதிக உபாத்தியாய வீடுகள் இருந்தன. தந்தையாரின் கட்டளைப்படி கிருஹஸ்தர்களின் வீடுகளுக்கு லட்சுமி பூஜை, அமாவாசைத் தர்ப்பணம், விவாஹம், சிரார்த்தம் முதலிய கிரியைகளைச் செய்து வைக்கப் போக வேண்டிய சந்தர்ப்பங்களிலும், வேங்கடராமனுக்கு அவற்றில் சிரத்தை குறைந்து விட்டது. ஏதோ பழைய மந்திரங்களை கிளிப்பிள்ளை சொல்வதுபோல் உச்சரித்துப் பொழுதைத் தொலைப்பதை விட, சில ஆயிரம் நாம ஜபம் செய்தால் மனம் ஆனந்திக்குமே என்று நினைத்து, ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் விடுவார். இவர், வைதீக வாடிக்கைகளுக்குச் சரிவர வருவதில்லை என்று புகார்கள் அதிகரித்தன. தகப்பனார். வேங்கடராமனின் வருங்காலத்தைப் பற்றி வருந்தலானார். ஒருவேளை இவனுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்தால் இவன் திருந்தக் கூடும் என்று எண்ணி, பெண் பார்த்து முடித்தார். கல்யாணமும் ஆயிற்று. ஆயினும் வேங்கடராமனின் போக்கு மாறவில்லை. இரண்டொரு ஆண்டுகளிலேயே அவர் மனைவி அம்மை கண்டு இறந்துவிட்டார். ஒருநாள், கிழக்கே வேப்பத்தூரில் ஒரு நிமந்த்ரணம், ஏழெட்டு வேஷ்டிகளும் வீட்டுக்காரர்கள் வாங்கியிருந்தார்கள். வேங்கடராமனை அங்கே போகும்படி சொல்லியிருந்தார், தகப்பனார், வேங்கடராமனும் வீட்டை விட்டுப் புறப்பட்டார். திருவிசநல்லூர் அக்ரஹாரத்தைத் தாண்டியதும் கிழக்கே செல்வதற்குப் பதிலாக மேற்குப் பக்கம் திரும்பி விட்டார். ஆஞ்சநேயரின் கோயிலுக்குப் போய்விட்டார். நாம ஜபத்தில் ஆழ்ந்து விட்டார். தாம் புறப்பட்ட காரியம் வேப்பத்தூரிலே செய்விக்க வேண்டிய உபாத்தியாயம் என்ற நினைப்பு அவருக்கு ஏற்பட்ட போது, பகல் மூன்று மணி இருக்கும். வருத்தத்தோடு மாலையில் திருவிசநல்லூர் நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவர் புறப்பட்டுச் சென்ற சில நிமிஷத்துக்கெல்லாம் ஆஞ்சநேயர் கோயில் பலிபீடத்தில் ஒரு ஜோடி புது வேஷ்டியும் தட்சணைக் காசுகளும் வைக்கப்பட்டிருந்தன. தம்முடைய பக்தன் செய்ய வேண்டிய காரியம் வீணாகிப் போய் அவனுக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக ஆஞ்சநேய சுவாமியே மனித உருவில் சென்று வைதிகம் செய்து வைத்துவிட்டு வந்துள்ளார். வேங்கடராமன் திரும்பி வீட்டிற்குச் சென்று சேர்வதற்குள், கோயில் பட்டர் பலிபீடத்தில் இருந்த வேஷ்டியையும் தட்சணைக் காசுகளையும் பார்த்த ராம நாம பித்துக்குளி வைத்துவிட்டு போயிருக்கிறது என்று ஊகித்து, அவற்றை திருவிசநல்லூருக்கு அனுப்பி வைத்தார். வேப்பத்தூர் வீட்டுக்கு சிராத்தத்திற்கு சென்று திரும்பிய இரண்டு வைதிகர்களும் கூட இதற்குள் வந்து, வேட்கடராம னுடைய தேஜஸ், வைதிகப் பெருமையை தகப்பனரிடம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஞ்நேயர் கோயில் பலிபீடத்திலிருந்து வந்திருந்த இரண்டு வேஷ்டிகளையும் பணத்தையும் பார்த்தபோதே வேங்கடராமனுக்கு வெளிச்சம் ஏற்பட்டு விட்டது. அப்பனே ! எனக்குப் பதிலாக இந்த சிரார்த்த மந்திரம் சொல்வதற்கா நீ இருக்கிறாய் ? என் பொருட்டு இனிமேல் நீ கஷ்டப்பட வேண்டாம் என்று கதறி அழுதார், வேங்கடராமன். அன்றிலிருந்து எங்கே போனார், என்ன ஆனார் என்றே யாருக்கும் தெரியாது. பின்னாளில், நாடு திரும்பி சங்கீத மேதையாக மருதாநல்லூர் ஸத்குருசுவாமியாக விளங்கியவர் இந்த வேங்கடராமனே.

Advertisement
 
Advertisement