Advertisement

பாம்பு புற்றுக்குள் ஆஞ்சநேயர் சிலை!

கம்பம்: கம்பம் புதுப்பட்டியில் பாம்பு புற்றுக்குள் ஆஞ்சநேயர் சிலை இருந்தது. தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி இடையன்குளம் பகுதியில் ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான புளியந்தோப்பில், பாம்பு புற்றில் ஒரு பொருள் மின்னுவது போல் தெரிந்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் இது குறித்து தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் தாசில்தார் சேகர் முன்னிலையில் புற்றுக்குள் இருந்த ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டது. நகைக்கடையில் அது எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என ஆய்வு செய்தனர். இதில் முக்கால் அடி உயரம், ஒரு கிலோ 730 கிராம் எடையில் இருந்த ஆஞ்சநேயர் சிலை முழுக்குமுழுக்க ஐம்பொன்னால் செய்யப்பட்டது தெரியவந்தது. தாசில்தார் கூறுகையில், தொல்லியல்துறையினர் மற்றும் அருங்காட்சியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்ட மிகவும் தொன்மை வாய்ந்த சிலையாக உள்ளது. இதன் மதிப்பு தெரியவில்லை, என்றார். நகைக்கடைக்காரர்கள் கூறுகையில், ஐம்பொன் சிலையில் 10 ல் ஒரு பங்கு தான் தங்கம் சேர்ப்பர். செம்பு, தாமிரம் அதிகமாக இருக்கும். வெள்ளி சிறிது சேர்ப்பர். அதன் பழமைக்கு தான் மதிப்பு, என்றனர்.

Advertisement
 
Advertisement