பூதியணி யார்வதனம் நீசர்சுடு காடதாம்
புரகரவுன் அக்க மணியைப்
புனையார்கள் மெய்ப்புலைத் தெருவெச்சில் உண்டுமெய்
புழுத்தி றந்திடு நாயுடல்
நாதிநின் பூசனைசெய் யாதகை ஈமத்தின்
நடுஅவிந் திடுஞெ கிழிகை
நற்கோயில் வலமுறாக் கால்கொலைக் களமதனில்
நாட்டமுட் கழும ரக்கால்
போதுசிவ தெரிசனம் உறாதவர்கண் விழுப்புணவை
பொங்குமெட் டித்த ருக்கள்
போதவுனை நினையாத நெஞ்சமே கற்பாறை
புகரண்ட வாள மலையாம்
தீதுபெறும் இவரைப் படைத்திட்ட நான்முகன்
செயலெ லாம்வீண் பாழதாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.