Advertisement

சூலுார் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா!

சூலுார் : காட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், பால் குட ஊர்வலம் நடந்தது. சூலுார் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை திருவிழா கடந்த, 21ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் துவங்கியது. 28ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். 1ம்தேதி மாலை 108 திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், அம்மன் சப்பரத்தில் பவனி வந்தது அருள்பாலித்தார். 400க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம், பால் குடம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பட்டிமன்றம், பக்தி பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. அதேபோல் நேற்று சூலுார் சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த சித்திரை திருவிழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நொய்யல் ஆற்றில் மேளதாளத்துடன், சூலுாரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அருள்பாலித்தார்.

Advertisement
 
Advertisement