Advertisement

கருப்பர் வாரார்!

வாராரய்யா வாராரு
கருப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு
கருப்பரிங்கே வாராரு

அள்ளி முடிச்ச கொண்டையப்பா
அழகு - மீசை துள்ளுதப்பா
வல்ல வேட்டிப் பட்டுடனே
வாரார் ஐயா ராசாப்போலே (வாராரய்யா வாராரு.....)

ஆளுயரம் அரிவாளாம்
அதுக்கேத்த கம்பீரமாம்
காலிலே முள்ளுச் செருப்பாம்
கருப்பனுக்கே தனிச்சிறப்பாம் (வாராரய்யா வாராரு...)

வீச்சரிவாள் கையிலுண்டு
வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச்
சுக்குமாந் தடியுமுண்டு (வாராரய்யா வாராரு...)

இடுப்பிலே சலங்கையுண்டு
இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கிலே வலிமையுண்டு
வற்றாத கருணையுண்டு (வாராரய்யா வாராரு...)

கையிலே சவுக்குமுண்டு
கனகமணிச் சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன் நாமமுண்டு (வாராரய்யா வாராரு...)

சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு
சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜாமுல்லை
மணக்குதப்பா இங்கே இப்போ (வாராரய்யா வாராரு...)

கருப்பர் துதி

சாட்டையில் பம்பரம் போலாட பேய்கள் தலை சுழல
வேட்டைகளாடி வரும்போது தெய்வங்கள்
மெய்மறந்து பாட்டுகள் தேடிப் பதுங்கி நின்றோடப்
பகலவன் போல் கோட்டையில் வாழ்பவனே

நீ கருப்பய்யா எங்கள் குல தெய்வமே.
சிங்கையில் வாழ் அய்யன் சித்தருவாள் ஏந்தும் கையன்
வங்கி சமுதாடு கொண்ட மார்த்தாண்டன் யெங்கள் பிரான்
அண்ணல் கருப்பண்ணரவர் யானினைத்தேன்
முத்துமணி வண்ணனையே நீ துணையாய் வா

தரையேழும் போற்றும் புதுவை நகரம் தழைக்க வந்த
துரைராசன் கோட்டைக் கருப்பணசுவாமி துரந்தரனே
அரை நாழிகையும் பிரியாமல் தோழநற்றுணையாக வைத்த
வரதா தென்சிங்கை கருப்பா பெலத்த வலுச் சிங்கமே.

சினமான கஞ்சன் தனையே வதைத் தோனென்று
தேவகியாள் மனமே மகிழ வரங் கொடுத்தோன்
திருமால் மருகாயினமான சுற்றமும் மற்றுமுள்ளோரும்
இனிப்புகழ கனமான வாழ்வு தருவாய் பெரியகருப்பண்ணனே

ஆறாரு செய்த பிழையிருந்தாலும் அன்போர்க்குகந்து
பாராதிருந்திட ஞாயமுண்டோயிந் தப்பா தகங்கள்
நீராகிலும் சற்றே மாறாதிருந்து யென்னை றெக்ஷீ அய்யா
காராரும் மேனித் துரையே பெரிய கருப்பண்ணனே!

எந்தன் மேல் குற்றம் ஏதுபிழைகள் இருந்திடினும்
தந்தை தாய் சேயின் முகங் கண்டிரங்கிடும் தன்மையென
வந்தனம் செய்து உன் பாதார விந்தம் வணங்கதற்கு
கந்துகம் ஏறி வருவாய் பெரிய கருப்பண்ணனே!

கருப்பசாமி வாரார்

கருப்பர்வாரார் கருப்பர்வாரார் கருப்பசாமி
அந்தக்கரியமேகம் போலேவாரார் கருப்பசாமி
குதிரைமேலே ஏறிவாரார் கருப்பசாமி
ஐயா-குதூகலமாய் ஓடிவாரார் கருப்பசாமி
அந்தாவாரார் இந்தாவாரார் கருப்பசாமி
ஐயா-ஆனந்தமாய் ஓடிவாரார் கருப்பசாமி
கட்டுக்கட்டி போகையிலே கருப்பசாமி
ஐயா- காவலாக கூடவாரார் கருப்பசாமி
எரிமேலி சென்றவுடன் கருப்பசாமி
ஐயா-எதிரேவழி காட்டிடுவார் கருப்பசாமி
அழுதைமலை எற்றத்திலே கருப்பசாமி
ஐயா - அழகாக நிற்கிறாரே கருப்பசாமி
உடும்பாறைக் கோட்டையிலே கருப்பசாமி
ஐயா - உருட்டி உருட்டி குளிக்கிறாரே கருப்பசாமி
வழிநடையாய்ப் போகையிலே கருப்பசாமி
ஐயா- வழிகாட்டி வந்திடுவார் கருப்பசாமி
நீலிமலை ஏற்றத்திலே கருப்பசாமி
ஐயா- நின்றுதவி செய்திடுவார் கருப்பசாமி
மலையாள தெய்வமய்யா கருப்பசாமி
ஐயா-மக்களையே காத்திடுவார் கருப்பசாமி
படிஏறிப் போகையிலே கருப்பசாமி
ஐயா- பாதுகாத்து வந்திடுவார் கருப்பசாமி
பட்டாகத்தி கொண்டுவாரார் கருப்பசாமி
ஐயா- பக்கத்துணையாய் வருவார் கருப்பசாமி
கச்சை கட்டி போகையிலே கருப்பசாமி
ஐயா - காதில்கடுக்கனிட்டு கருப்பசாமி
மீசை முறுக்கி வாரார் கருப்பசாமி
ஐயா- மிடுக்காக ஓடிவாரார் கருப்பசாமி (கருப்பர் வாரார்).

Advertisement
 
Advertisement