Advertisement

கஜேந்த்ர மோட்சம்

1. இந்த்ரத்யும்ன: பாண்ட்ய கண்டாதிராஜ:
த்வத் பக்தாத்மா சந்தனாத்ரௌ கதாசித்
த்வத் ஸேவாயாம் மக்னதீ: ஆலுலோகே
நைவ: அகஸ்த்யம் ப்ராப்தம் ஆதித்ய சாமம்

பொருள்: குருவாயூரப்பனே! முன்பு ஒரு காலத்தில் பாண்டிய நாட்டின் அரசனாக இருந்த இந்த்ரத்யும்னன் என்பவன் உன்னிடம் மிகுந்த பக்தி உடையவனாக இருந்தான். உன்னை த்யானிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அப்படி உன்னைத் த்யானித்து அவன் தன்னை மறந்த நிலையில் இருந்தபோது, அவனிடம் விருந்தினராக இருக்க வேண்டும் என்று அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் காணவில்லை அல்லவா? (ஸ்ரீஅப்பனும் ஆம் என்று தலையசைத்தார்)

2. கும்போத்பூதி: ஸம்ப்ருத க்ரோத பார:
ஸ்தப்தாத்மா த்வம் ஹஸ்தி பூயம் பஜேதி
சப்த்வா அத ஏனம் ப்ரத்யகாத் ஸோபி லேபே
ஹஸ்தீந்த்ரத்வம் த்வத் ஸ்ம்ருதி வ்யக்தி தந்யம்

பொருள்; குருவாயூரப்பனே! இதனைக் கண்ட அகத்திய முனிவர். மிகவும் கோபம் கொண்டார். இதனால் அவர், உனது கர்வம் உடைய மனதால் என்னை அலட்சியப்படுத்திய அரசனே! நீ யானையாகப் பிறப்பாய் என்று அரசனைச் சபித்தார். அந்த அரசனும், யானையாகப் பிறந்தான். இருந்தாலும் உன்னையே அவன் த்யானம் செய்த காரணத்தினால் யானைகளில் சிறந்த யானையாக விளங்கினான் அல்லவா?

3. துக்தாம்போதே: மத்யபாஜி த்ரிகூடே
க்ரீடந் சைலே யூதப: அயம் வசாபி:
ஸர்வாந் ஜந்தூந் அதயவர்த்திஷ்ட சக்த்யா
த்வத் பக்தாநாம் குத்ர ந உத்கர்ஷ லாப:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பாற்கடலின் நடுவில் உள்ள த்ரிகூடம் என்ற மலையில் உள்ள யானைகளின் கூட்டத்திற்கு அரசனாக இவன் விளங்கினான். அனைத்து மிருகங்களையும் விட இவன் திறன் பெற்றிருந்தான். உன்னையே வணங்கும் பக்தர்களுக்கு எந்த இடத்தில்தான் மேன்மையும் புகழும் கிடைக்காமல் இருக்கும்?

4. ஸ்வேன ஸ்தேம்னா திவ்ய தேஹத்வ சக்த்யா
ஸோயம் கேதான் அப்ரஜானன் கதாசித்
சைலப்ராந்தே கர்மதாந்த: ஸரஸ்யாம்
யூதை: ஸார்த்தம் த்வத்ப்ரணுன்ன: அபிரேமே

பொருள்: குருவாயூரப்பனே! அந்த கஜேந்திரன் தன்னுடைய உடல் பலத்தாலும், ஒளியுடைய உடலாலும் கிடைத்த அற்புதமான சக்தி காரணமாகத் துன்பம் என்பதே என்ன என்று அறியாதவனாகத் திரிந்தான். ஒருநாள் அந்த மலையில் வெயில் அதிகமாக இருந்தது. இதனால் சோர்வுற்ற யானைக் கூட்டம், உன்னுடைய தூண்டுதலால், அங்கு உள்ள ஒரு குளத்தில் இறங்கி விளையாடத் தொடங்கியது.

5. ஹுஹு: தாவத் தேவலஸ்யாபி சாபாத்
க்ராஹீ பூத: தஜ்ஜலே வர்த்தமாந:
ஜக்ராஹ ஏனம் ஹஸ்திநம் பாததேசே
சாந்த்யர்த்தம் ஹி ச்ராந்தித: அஸி ஸ்வாகாநாம்

பொருள்: குருவாயூரப்பனே! அந்தக் குளத்தில் ஹு ஹு என்ற கந்தர்வன், தேவலர் என்ற முனிவரின் சாபத்தால் முதலையாக இருந்தான். அவன் கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டான். உன்னுடைய பக்தர்களை காப்பாற்றவும் அவர்களுக்கு நல்ல ஞானம் ஏற்படவும் அன்றோ நீ அவர்களுக்குத் துன்பத்தை அளிக்கிறாய்?

6. த்வத்ஸே வாயா வைபவாத் துர்நிரோதம்
யுத்யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம்
ப்ராப்தே காலே த்வத் பதைகாக்ர்ய ஸித்த்யை
நக்ராக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யாதா: த்வம்

பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய ஆராதனையின் காரணமாக ஆயிரம் ஆண்டு காலம் கஜேந்திரனும் அந்த முதலையும் சண்டை இட்டன. அந்த கஜேந்திரனின் கர்ம காலம் முடியும் வரை (ப்ராப்தே காலே), உனது வைகுண்ட பதவியை அவனுக்கு அளிப்பதற்காக, அவனை முதலை என்னும் துன்பத்தால் அடக்கினாய் அல்லவா?

7. ஆர்த்தி வ்யக்த ப்ராக்தன ஜ்ஞா ன பக்தி:
சுண்டோத் க்ஷிப்தை: புண்டரீகை: ஸமர்ச்சன்
பூர்வாப்யஸ்தம் நிர்விசேஷாத்ம நிஷ்ட்டம்
ஸ்தோத்ர ச்ரேஷ்டம் ஸ அன்வகாதீத் பராத்மந்

பொருள்: பரமாத்மாவே! குருவாயூரப்பனே! தனக்கு உண்டான மிகுதியான துன்பத்தின் காரணமாக அந்த கஜேந்திரனுக்குப் பூர்வ ஜென்ம ஞானமும் பக்தியும் பிறந்தன. உடனே தனது துதிக்கையால் எடுக்கப்பட்டத் தாமரை மலர்களைக் கொண்டு உன்னை அர்ச்சனை செய்தான். பின்னர் தான் முற்பிறவியில் கற்றுக் கொண்ட நிர்க்குண ப்ரஹ்ம ஸ்தோத்திரத்தைக் கூறத் தொடங்கினான். அந்த ஸ்தோத்திரம் - (இது நாராயணீயத்தின் பகுதி அல்ல, பாகவதத்தில் உள்ளது).

ஸ வை தேவாஸுர மர்த்யதிர்யங்
ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான்ன ஐந்து:
நாயம் குண: கர்ம ந ஸன்ன சாஸன்
நிஷேதசேஷோ ஜயதாதசேஷ:

இதன் பொருள் - ப்ரஹ்மமாகிய பரம்பொருள் என்பது தேவன் , அசுரன், மனிதன், மிருகம், பறவை, புழு, பெண், புமான், நபும்சகன் ஆகிய எதுவும் அல்ல: அது குணமோ, கர்மாவோ, ஸத்தோ, அஸத்தோ அல்ல. இவற்றையும் விட மேலானது. அந்தப் பரமாத்மா எனக்கு உரித்தாகுக.

8. ச்ருத்வா ஸ்தோத்ரம் நிர்குணஸ்தம் ஸமஸ்தம்
ப்ரஹ்மேசாத்யை: ந அஹம் இதி அப்ரயாதே
ஸர்வாத்மா த்வம் பூரி காருண்ய வேகாத்
தார்க்ஷ்யாரூட: ப்ரேக்ஷித: அபூ: புரஸ்தாத்

பொருள்: குருவாயூரப்பனே! கஜேந்திரன் கூறிய ஸ்தோத்திரத்தைக் கேட்ட ப்ரும்மா, சிவன், முனிவர்கள் ஆகியோர், அந்த ஸ்தோத்திரத்தால் புகழப்படுவது தாங்கள் அல்ல என்று உணர்ந்து அங்கு வரவில்லை. உடனே அந்தர்யாமியான நீ, உனது கருடன் மீது ஏறிக்கொண்டு அங்கு வந்து கஜேந்திரனுக்கு காட்சி அளித்தாய் அல்லவா?

9. ஹஸ்தீந்த்ரம் தம் ஹஸ்த பத்மேன த்ருத்வா
சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதாரீ:
கந்தர்வே அஸ்மின் முக்தசாபே ஸ ஹஸ்தீ
த்வத் ஸாரூப்யம் ப்ராப்ய தேதீப்யதே ஸ்ம

பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் நீ உனது தாமரை போன்ற அழகிய கைகளால் அந்த கஜேந்திரனைப் பிடித்துக் கொண்டு, உனது சக்கர ஆயுதத்தால் அந்த முதலையை கிழித்தாய். உடனே அந்த முதலையும் தனது சாபம் நீங்கப் பெற்று கந்தர்வனாக மாறினான். கஜேந்திரனும் உன்னை அடைந்தான்.

10. ஏதத் வ்ருத்தம் த்வாம்ச மாம் ச ப்ரதே ய:
காயேத் ஸ: அயம் பூயஸே ச்ரேயஸே ஸ்யாத்
இதி உக்த்வா ஏனம் தேன ஸார்த்தம் கதஸ்த்வம்
திஷ்ண்யம் விஷ்ணோ பாஹி வாதாலயேச

பொருள்: விஷ்ணுவே! குருவாயூரப்பனே! இப்படிப்பட்ட இந்த கஜேந்திர மோட்ச சரிதத்தையும் என்னையும் யார் ஒருவர் அன்றாடம் காலை வேளையில் கூறுகிறாரோ, அவர் மிகவும் உயர்ந்த நன்மைகளைப் பெறுவார். என்று நீ கூறினாய். அத்துடன் அந்த கஜேந்திரனையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு நீ வைகுண்டம் சென்றாய், என்னைக் காப்பாற்றுவாயாக.

Advertisement
 
Advertisement