Advertisement

இராங்கியம் கருப்பர் திருத்தாண்டகம்

சிலையானைப் படையெடுத்த செங்கை யானைத்
திகழுறங்காப் புளியானைத் தினமும் சித்ர
முலையார்கள் மடலெழுதும் வடிவத் தானை
முக்திதரும் மெய்ஞ்ஞான மூர்த்தி யானைக்
கலையான நறுந்துளவ மார்ப்பத் தானைக்
கமழ்பெரிய கருப்பண்ணனைக் கடாட்சத் தானை
மலையாளத் துரையானை என்னு ளத்தில்
வந்தானைக் கண்டடியேன் வணங்கி னேனே! 1

திண்ணமுட னேயுனது ஆலயங் கண்டன்பு
செய்து தெரி சித்த வர்க்கு
சிந்தைவியா குலமேது! அல்லல்வல் வினையேது!
ஜெனன மர ணங்க ளேது!
துண்ணெனத் தலைசுத்தி ஆட்டிப் பிசாசைநிர்த்
தூளிசெய் தேசித் தியாய்ச்
சொல்லரிய முப்பூசை வாங்குமதி காரனே!
சுகிர்தசாம் ராஜ்ய முதலே! 2

விண்ணுலகு சிகரகோ புரங்கள்மா டங்கள்
மேன்மைசேர் ஆலயத்துள்
வீற்றிருந் தருள்செல்வி அங்காளி வாசலில்
மேவுதள பதியா திபா
வண்ணமால் நேமக் கருப்பணருள் முத்தப்பன்
மைந்தனைப் பெறவருள் செய்வாள்
வளமிகுத் திடுசிங்கை நகர்செழித் திடநாளும்
வளர்கருப் பணசு வாமியே! 3

கோடான கோடிபிழை செய்யினும் என்னை நீ
கொண்டா தரிக்க வேணும்
குறையாத நிறைபவிசு தரவேணும் நன்மைகள்
கூடியே வரவும் வேணும்
தேடாமல் மேலான பேரின்ப வாழ்க்கையும்
செல்வமது தரவும் வேணும்
தீயரைப் பாடாமல் நின்சரணம் மீதினில்
செந்தமிழ் பாட வேணும் 4

நீடாக நல்லறிவு வரவேணும் அன்னமிட
நிதியும்வந்த தெய்த வேணும்
நீவழித் துணையாக வரவேணும் மேலான
நிறையாயுள் தரவும் வேணும்
வாடா மலர்த்தரு உறங்காப்பு ளிக்குள்நிதம்
வந்துவிளை யாடு முதலே
வரமிகுத் திடுசிங்கை நகர்செழித் திடஎங்கும்
வளர்கருப் பணசு வாமியே! 5

செல்லுந் திசைக்கெலாம் ஆதார மாகவே
திடமுடன் வந்து தவுவாய்!
சென்றிடு வழிக்கெல்லாம் மாறாது துணையான
சேவகனு மாக வருவாய்!
சொல்லு நவரசமொழுகு செந்தமிழ் படி என்று
சொல்லி நீ வந்து கேட்பாய்!
தூயசெந் தமிழ்மாலை சொன்னவர்க் கேபர
சுகானந்த முங்கொடுப்பாய்! 6

கல்லுருக மற்றொன்றின் இளகாத வைரமும்
கசிந்துமிக வல்லுருக்கும்!
கசிந்துருகி நின்கருணை வீட்சணக டாட்சமும்
கதிக்குமனு பூதிய தனால்
மல்லுறு பயாசலா விசாலபரி பூரணா
மன முவந்துதவ வருவாய்
வரமிகுத் திடுசிங்கை நகர்செழித் திடஎங்கும்
வளர்கருப் பணசு வாமியே! 7

அடியடியின் வாழைபோல் எனதுகுல கோத்திரம்
அத்தனையும் அடிமை கொண்டு
ஆதரித்திடுகின்ற எனதுகுல தெய்வமே
அடிபணிந் தேத்தி நின்றால்
துடிமீது பில்லிசூ னியமேவல் வஞ்சனை
சூதொன்றும் வந்தி டாது
சொப்பனம் அதிரடி பயங்கரம் வராது எம
தூதர்பய மணுகி டாது 8

கடியாது உபத்தரவு தையாது படையம்பு
கரடிபுலி வாய் தொடாது
கலிகளணு காது வெம் பிணிகளிட ராதுவலு
கண்ணேறு மேவராது
மடுவான பூதப்பி சாசுகள் உருட்டாது
வருமுமது சலுகை ஐயா!
வரமிகுத் திடுசிங்கை நகர்செழித் திடஎங்கும்
வளர்கருப் பணசு வாமியே! 9.

பாராத கோடங்கியில்லை நான் சென்றுதுதி
பண்ணாத கோயி லில்லை!
பணிந்தாடு தீர்த்தமும் சொல்லிமுடி யாதுநான்
பணிந்துசொல் குறைகள் ஏதும்
தீராமல் உன்னிடம் வந்தடிமையா யினேன்
தீர்க்கவரம் ஈந்து நீயும்
சீக்கிரம் செயவேணும் என்றவுட னேகிருபை
செய்துதிரு நீறு தருவாய் 10.

பேறான கர்ப்பந் தரித்துநிலை யாகி ஆண்
பெற்றுமெய்த் தாய்தந் தையும்
பேறான மறுவருடம் உன்னாலயப் படியில்
பேரிடவ ரப்பண் ணுவாய்!
மாறாவ ருத்துகலி கோபால நின்மகிமை
வழுத்த எவராலு முளதோ!
வரமிகுத் திடுசிங்கை நகர் செழித் திடஎங்கும்
வளர்கருப் பணசு வாமியே! 11.

காலிட்ட தண்டையும் நீ தொட்ட சல்லடம்
கட்டிவிடு தொங்க லழகும்
கலாரிட்ட மணியோசை இடையிட்ட சமுதாடு
கையிட்ட கணையா ழியும்
மேலிட்ட அங்கியும் மார்பிட்ட பூநூல்
மிகுந்திட்ட ஆப ரணமும்
மின்னிட்ட குழைகாதில் அணிந்திட்ட சொரிமுத்து
மேலிடுக டுக்க னழகும் 12.

மாலிட்ட திருநாமம் நீறிட்ட நெற்றியும்
மகிழ்ந்திட்ட கஸ்தூரியும்
வாழ்ந்திட்ட சந்திரகவி குச்சிட்ட தொங்கலும்
வலதுதோ ளரிவா ளுமாய்ப்
பெலமுற்ற தண்டையுடன் புரவியுடனே வந்து
பேரழகுக் காட்சி தருவாய்
பெருகுசிங்கத் துரைமேவு வருசமுகத் துறையான
பெரியகருப் பணசு வாமியே! 13

Advertisement
 
Advertisement